பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

337


திருமாணிகுழி

கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவிலும் நெல்லிக்குப் பத்திற்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. மாவட்ட நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஒன்றரை கி.மீ. நடந்து - ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். வடக்கே கெடிலத்தையும் தெற்கே கேப்பர் மலைத்தொடர்ச்சியையும் உடைத்தாகி வாணமாதேவி அணையிலிருந்து நீர்ப் பாசனத்தைப் பெற்று வளங்கொழிக்கும் ஊர் திருமாணிகுழி.

இவ்வூரின் நீர்வள - நிலவளச் செழிப்பைத் திருஞான சம்பந்தர் இவ்வூர்மேல் பாடியுள்ள தமது தேவாரப் பதிகத்தில் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். நாவுக்கரசரும் இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடலும் பாடியதாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பதிகம் கிடைக்கவில்லை. அருணகிரியாரின் திருப்புகழ் இவ்வூருக்கு உண்டு. புராணமும் உண்டு. இவ்வூர்ச் சிவன் பெயர்: மாணிக்க வரதர்; அம்மன் பெயர்: மாணிக்கவல்லி; மரம்: கொன்றை.

மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவங்கொண்டு மாவலியை அழித்த பின்னர் இவ்வூருக்கு வந்து சிவனை வழிபட்டார் என்பது

கெ.28.