பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

கெடிலக்கரை நாகரிகம்


புராணவரலாறு. மாணி வழிபட்ட இடமாதலின் மாணி குழி எனப் பெயர் பெற்றது. கோயிலில் இலிங்கம் இருக்கும் கருவறைப் பகுதி சிறிது பள்ளமாக குழியாக இருக்கும். அங்கே எப்போதும் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும். எனவே, மாணி வழிபட்ட குழி மாணி குழியாயிற்று என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணம் முதிர்ந்த வைணவப் பற்று உடையவர்க்கு எரிச்சலை ஊட்டலாம். மற்றும், சிவனது மாண்பைக் குலைக்கும் முறையில் மற்றொரு பெயர்க்காரணம் சொல்லப் படுகிறது. எழுதக் கூடாத அந்தப் பெயர்க்காரணத்தை விட்டுத் தள்ளுவோம். திருமாணி குழிக்கோயிலின் முன்புறத் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம்.

இது, கோயிலின் முதற்பெருவாயிற் கோபுரமாகும். கிழக்கு நோக்கியுள்ளது. பின்வரும் படத்தில் ஓரளவு கோயிலின் விரிவான தோற்றத்தைக் காணலாம்:

இந்தப் படம் கோயிலின் வடக்குப் புறத்தில் இருந்து கொண்டு எடுத்தது. படத்தில் தெரிவது கோயிலின் வடக்குப் புறத் தோற்றமாகும். கோபுரத்தின் மேற்குப்புற - அஃதாவது பின்புறத் தோற்றம் இப்படத்தில் காணப்படுகிறது. கோபுரத்தின் கிழக்குப் புறத்திற்கு எதிரே ஒரு சிறு மலை இருப்பதைக் காணலாம். படத்தில் மலையைக் கோபுரம் மறைத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மலை ஓரளவு படத்தில் தெரிகிறது. திருவண்ணாமலை போலவே இம்மலையிலும் கார்த்திகைத் திங்களில் கார்த்திகையன்று தீபத் திருவிளக்கேற்றித் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் வெகு தொலைவிலிருந்து மக்கள் இவ் விழாவிற்கு வருவர்.