பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

343



இம்மட்டுமா? இந்தப் பிள்ளையார் கோயில் பெரிய ‘பிக்னிக் சென்டர்’ (Picnic Centre) ஆகவும் திகழ்கிறது. சுற்றுப்புற ஊர் மக்கள் ஊரோடு திரண்டு வந்து பிள்ளையாருக்குப் பூசனை புரிந்து வழிபாடு செய்து, இங்கேயே உணவு சமைத்து உண்டு களித்துச் செல்வர்.

பாலூர்

பாலை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இவ்வூர் கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் - பண்ணுருட்டிக்குக் கிழக்கே 11 கி.மீ. தொலைவிலும் - நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. ஆற்றில் பாலம் உண்டு. பாலூரிலிருந்து தெற்கேயுள்ள குறிஞ்சிப்பாடிக்கு மாவட்டக் குறும்பாதையொன்று செல்கிறது. பாலூரோடு தொடர்புடைய பாதைகளிலெல்லாம் பேருந்து வண்டிப் போக்குவரவு உண்டு. இவ்வூரில் புகழ் வாய்ந்த திரெளபதை அம்மன் கோயில் இருக்கிறது.

தன்னிடம் உள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணையினால் பாலூர் வெளியுலகிற்கு விளம்பரமாகி யிருக்கிறது. தமிழகத்தில் முதல் முதலாக ஏற்படுத்தப்பட்ட வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை பாலூர்ப் பண்ணைதான். 1905 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. பாலூருக்குக் கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் 16 ஏக்கர்ப் பரப்பில் தொடங்கப் பெற்ற இப் பண்ணை இப்போது 56 ஏக்கர் பரப்புக்கு விரிந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் பண்ணை என்பதற்குப் ‘ஃபாரம்’ (FARM) என்பது பெயர் அல்லவா? அந்தப் ‘பாரம்’ என்னும் பெயராலேயே இன்றும் இது சுற்று வட்டாரத்து மக்களால் அழைக்கப்படுகிறது. ‘பாலூர்ப் பாரம்’ என்பது மக்கள் வாயில் அடிபடும் பெயர். ஆங்கிலேயர்கள் - அல்ல அல்ல.ஆங்கிலம் படித்தவர்கள் அன்று கற்றுக் கொடுத்த பெயரை இன்றும் பொது மக்கள் விடமாட்டோம் என்கிறார்கள். பண்ணை யிருக்கும் பகுதி பாரம்’ என்ற பெயரில் ஒரு தனிக் குடியிருப்பு போல் வளர்ந்துள்ளது.

இந்தப் பண்ணையில் தொடக்கத்தில் மணிலாக் கொட்டை ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றது; இப்போது நெல், கரும்பு, கம்பு, கேழ்வரகு, வரகு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு