பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

349


கூறப்பட்டுள்ளது. கன்னர தேவன் அவனது நாட்டில் பட்டம் ஏற்றது 939 ஆம் ஆண்டிலாகும். அதனோடு 22 ஆண்டுகள் சேர்த்தால் 962 ஆகிறது. ஆகவே, இக்கல்வெட்டு 962இல் வெட்டப்பட்டது என்பது தெளிவு. எனவே, 962ஆம் ஆண்டளவில் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியில் அடங்கியிருந்தது என்பது புலனாகிறது. இவன் திருப்பணி செய்துள்ளான் என்பதை அறிவிக்கும் சான்றாகப் பாகூர்க் கோயிலில் இவனது உருவச் சிற்பம் உள்ளது. (மேலேயுள்ளது)

இது கன்னர தேவனது உருவச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று உய்த்துணரப்படுகிறது. சிவன் கோயிலுக்குச் செய்யப்பட்டுள்ள அறக்கட்டளையைக் கூறும் மேலுள்ள கல்வெட்டில், ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு’ என்றிருக்கும் பகுதி கவனிக்கத்தக்கது. பாகூர் கல்வெட்டில் ‘வாகூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மக்கள் பேச்சு வழக்கில் வாவூர்’ என்கின்றனர். இது நிற்க, ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே’ என்னும் தொடரைக் கொண்டு, அன்று பாகூரைச் சூழ்ந்த பகுதி ‘பாகூர் நாடு’ என அழைக்கப்பட்டதாகவும், அப் பகுதியின் தலைநகராகப் பாகூர் விளங்கியதாகவும் அறியலாம். பாகூர் நாடு இன்று புதுச்சேரி மாநிலத்தில் ‘பாகூர் கொம்மின்’ எனப்படுகிறது; தலைநகர் பாகூரேதான். இன்று பாகூரில் உயர்நிலைப் பள்ளி உள்ளது.