பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

கெடிலக்கரை நாகரிகம்


வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள், திருவயிந்திரபுரத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன; இவ்வாறே மேற்கு - கிழக்காக ஓடிவரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கித் திரும்பித் தெற்கு வடக்காக ஒடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஓடுவது ஒரு புதுமையாம் - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஒடுவதால் கெடிலத்திற்கு ‘உத்தர வாகினி’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெருமக்கள். உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி ஒடும் ஒர் ஆற்றோட்டத்தின் கரையில் ஒரு தெய்வத் திருப்பதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாம். இந்தச் சிறப்பு திருவயிந்திரபுரத்திற்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு நோக்கி ஓடும் உத்தர வாகினியாகிய கெடிலத்தின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் அமைந்திருப்பதால், இவ்வூர் மிகவும் பெருமைக்கு உரியதெனப் பெருமக்களால் போற்றப்படுகிறது.

இந்த அடிப்படையில், திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித்துக் கூற விரும்புகிறேன் அடியேன். அயிந்திரம் என்னும் சொல்லுக்குக் கிழக்கு என்னும் பொருளும் உண்டு. கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதலின் ‘அயிந்திரபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம். தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது தென்கரையிலோதான் இருக்கும்; ஆற்றின் கிழக்குக் கரையில் திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை.