பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

353


இந்த நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பது ஒரு புதுமை - அற்புதம்! எனவே, அயிந்திரக் (கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை ‘அயிந்திரபுரம்’ என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர்,ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடிபாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் துண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் ‘உத்தர வாகினி’ என அழைக்கப்படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப்படலா மல்லவா? திருவயிந்திரபுரத்துக் கோயிலின் தோற்றம் முன்பக்கமுள்ளது.

இந்தப் படம் கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரேயுள்ள மலைமேல் நின்றுகொண்டு எடுத்தது. படத்தில் முகப்பில் மலைப் படிக்கட்டு தெரிவதைக் காணலாம். படிக்கட்டின் அடியில் - நடுவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அங்கேதான் கோயிலின் கிழக்கு வாயில் இருக்கிறது; அவ்வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; அது படத்தில் தொலைவில் தெரிகிறது. ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியே யாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. நடுக்கோபுரத்தையும் மேற்குக் கோபுரத்தையும் படத்தில் காணலாம். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக்கிறது; இம் மலையின்மேலும் கோயில் உண்டு; அம் மலைக்கோயில் அடுத்த பக்கமுள்ளது.

இந்த மலைக் கோயிலும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. ‘அயக்கிரீவன் கோயில்’ என்பது இதன் பெயர் அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவன் தோற்றமும் ஒன்று. கெ.23.