பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

357


என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். வெளியூரார் சிலர் திருவயிந்திரபுரம் கோயிலில் வந்து திருமணம் செய்து கொண்டு போவதும் உண்டு.

திருவயிந்திரபுரத்தில் சோழர், பாண்டியர் முதலியோர் காலத்தைச் சேர்ந்தனவாய் ஐம்பதிற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் மூன்றாம் இராச ராசச் சோழனது கல்வெட்டொன்று மிகவும் குறிப்பிடத்தக்கது. பாண்டியர்க்குத் தோற்றோடிய அச்சோழனைக் கோப்பெருஞ் சிங்கன் சேந்தமங்கலத்தில் சிறை வைத்த செய்தியும், சோழனுக்கு நண்பனான போசள (மைசூர்) மன்னன் வீரநரசிம்ம தேவன் கோப்பெருஞ்சிங்களை முறியடித்துச் சோழனைச் சிறை மீட்ட செய்தியும் இந்நூலில்'கெடிலக்கரை அரசுகள் - கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை விவரிக்கும் மூன்றாம் இராசராசனது கல்வெட்டு திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-

“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜ ராஜ
தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிராமாண்டு,
ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சண ஸ்ரீவீர
நரசிம்மதேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப்பெருஞ்
சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடுவந்து
தன்படையை இட்டு ராஜ்யத்தை அழித்து
தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும்
அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ
மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை
என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத
ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன் பெண்டு
பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்
பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ
சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக் கொடு என்று
தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த
ஸ்வஸ்தி ஸ்ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாஸி
தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண
தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும்
கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர்
மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும்
அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான்
சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹு