பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

387


"1963 ஜூலை மீ2 உ கூடலூர் தாலுக்கா கரையேற
விட்டவர் குப்பம் மதுறா புதுவண்டி பாளையம் - 33.
வினாயகர் கோவில் தெருவிலிருக்கும்....”

இது 1963 ஆம் ஆண்டு பதிந்தது. இந்தப் பதிவில் கரையேற விட்டவர் குப்பம் என்றிருக்கிறது. ஆனால், வழக்கில் கரையேற விட்ட குப்பம் என்றே இருக்கிறது. ஒரு வேளை, மற்ற எழுத்துப் பிழைகளைப்போல 'விட்டவர்” என்பதும் எழுத்துப் பிழையாயிருக்கலாமோ எனக் கருதி வேறு சில ஆண்டுப் (1947, 1956) பதிவுகளையும் பார்த்தேன் நான்; அவற்றிலும் கரையேற விட்டவர் குப்பம்” என்றே உள்ளது. கரையேற விட்டவர் என்பது, அப்பர் பெருமானைக் கரையேற்றிக் காப்பாற்றிய சிவனைக் குறிக்கும் பெயராகும்; எனவே, கரையேறவிட்டவர் குப்பம் என்றால், கரையேறவிட்ட சிவன் எழுந்தருளியுள்ள குப்பம் என்பது பொருளாம். இதிலிருந்து, வண்டிப் பாளையத்தில் ஒரு சிவன் கோயில் அன்று இருந்தது. அந்தக் கோயில் இறைவன் பெயர்தான் கரையேறவிட்டவர் என்பது புலனாகும்.

இதற்கு, கரையேறவிட்ட நகர்ப் புராணம் என்னும் நூற்பதிப்பின் பிற்சேர்க்கையிலும் சான்று உள்ளது. அந்நூலை 1896 ஆம் ஆண்டில் பதிப்பித்த இராசப்ப ஆசிரியரும் அவர் தம்பி பொன்னுசாமி என்பாரும் உரைநடையில் எழுதியுள்ள பிற்சேர்க்கையிலுள்ள சில பகுதிகள் வருமாறு:

“அப்பர் சுவாமிகள் சமணர்கள் கட்டிவிட்ட கற்றுரண் மிதப்பிற் கடல் கடந்து கரையேறிய காரணத்தால் விளங்கிய திருக்கோயில் கிலமாய்விட்டபடியால் இயன்ற மட்டில் இதைப் புதுப்பித்து அவ் வுற்சவத்தை நடத்தி அன்பர் குழாங்களை ஆனந்திக்கச் செய்ய விரும்பி. அச் சிறு தலத்துச் சிவாலயத் திருப்பணியை மேற்கொண்டார்....... அப்பர் சுவாமிகள் கரையேறிய ஸ்தானத்தில் சிதைந்த திருக்கோயிலை அமைக்க வேண்டுமென்றாலோ “கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது”” போலாமெனத் துணிந்து எங்கள் சொந்த மனையில் தட்டோட்டுக் கட்டட மொன்றமைப்பித்து..... கரையேற விட்டவர் குப்பம் கிராமத்தில் சுவாமியிருந்த கட்டடத்தில் காலையில் கொண்டுவந்து வைத்து.

மேலுள்ள பகுதியைக் கொண்டு, அப்பர் கரையேறிய இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்துபோனமை புலனாகும்; அக் கோயிலைப் புதுப்பிக்க முயன்றவர்கள் அது முடியாது எனக் கைவிட்டமையும் புலப்படும், ஆவணப் பதிவுகளிலேயன்றி இவ்வுரைநடைப் பகுதியிலும் கரையேற விட்டவர் குப்பம் என இருப்பது காணலாம்.