38
கெடிலக்கரை நாகரிகம்
படுகை மணற்பாங்காயிருக்கக் காணலாம். அதைத் தொடர்ந்து கடலூர் வட்டமும் மணற்பாங்கானதேயாம்.
கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் மலைப்பகுதியில் தோன்றித் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதி வரைக்கும் பாறைகளிடையே ஓடிவருவதால்தான், அப்பர் பெருமான் தேவாரத்தில்,
- [1]"வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
- திரையார்ந்த புனல்பாய் கெடிலம்"
- [2]"வரைகள் வந்திழியும் கெடிலம்
என்று பாடியுள்ளார். கெடிலம், தான் தோன்றும் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாய்க்கால் போலவும், திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கத்தில் ஓர் ஓடை போலவுமே தோற்றமளிக்கிறது. பின்னர்க் கிழக்கு நோக்கி வரவரத்தான் வளர்ந்து விரிகிறது. இந்நிலை எல்லா ஆறுகளுக்கும் உள்ள பொது இயல்புதான்.
கடலூர் வட்டத்தில் அகன்று விரிந்துள்ள கெடிலம், அங்கே பாறைகளுக்கிடையே ஓடாவிடினும், திருவதிகைக்குக் கிழக்கே சென்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து கடலூர் பகுதி வரைக்கும், செங்கல் மலைத் தொடர்ச்சியாகிய கேப்பர் மலை (பீடபூமி) மேட்டு நிலத்தின் வடபுறமாக அதன் அடிவாரத்தையொட்டி ஓடி, கடலூர்க் கடற்கரைக்கு அருகில் மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது.
துணைகள்
குறுகிய காலத்தில் குறுகிய முயற்சியில் தம் குறிக்கோளை முடித்து விடுபவர் போல, கெடிலம் 112 கி.மீ. (70 கல்) நீளம் குறுகிய பயணத்திலேயே தன் கதையை முடித்துக்கொள்ளினும், ‘அரைக்காசு கல்யாணமாம் - அதிலே ஒரு வாணவேடிக்கையாம்’ என்ற பழமொழியேபோல, தன் குறுகிய பயணத்திலேயே பேராறுகள் புரியும் அருஞ்செயல்களைத் தானும் புரிகிறது; பேராறுகள் பெற்றுள்ள பெரும் பேறுகளைத் தானும் பெற்றுள்ளது. அப்பேறுகளுள், பயணத்திடையே கிடைத்திருக்கும் துணைகள் குறிப்பிடத்தக்கவையாம்.