பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

393


புருகேசு பேட்டை

இவ்வூர் வண்டிப் பாளையத்திற்குத் தெற்கே அரை கி.மீ. தொலைவில் கேப்பர் மலை அடிவாரத்தில் கொண்டங்கி ஏரிக்கரையில் உள்ளது. 1767 முதல் 1769 வரை கடலூரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஹென்றி புரூக் (Henry Brooke) என்பவர் பெயரால் இது ‘புரூக்ஸ் பேட்டை’ என அழைக்கப்பட்டது. மக்கள் இப்போது ‘புருகேசு பேட்டை” என்கின்றனர். இவ்வூரில் ஒரு முருகன் கோயில் உண்டு. அதை மையமாகக் கொண்டு ஞானியார் அடிகளார் இவ்வூருக்கு ‘முருகேச நகர்’ எனப்பெயர் சூட்டினார்கள். இந்தக் கோயில் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் ‘சண்முகக் கோட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது ‘புருகேசு’ ‘முருகேசு’ ஆயிற்று! இந்த ஊரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டைதான்!

இந்தப் பகுதிக்குக் கிழக்கேயுள்ள ‘வசந்தராயன் பாளையம்’ என்னும் சிற்றுாரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டையே. அங்கே பட்டு நெசவு மிகுதியாய் நடைபெறுகிறது. இதற்கு அணித்தேயுள்ள ‘மண(ல்) வெளி’ என்னும் இடத்தில் கோரைப் பாய் நெசவு பெரிய அளவில் நடைபெறுகிறது.

புதுப்பாளையம்

இது கடலூர்ப் புதுநகரைச் சேர்ந்த பகுதி, திருப்பாதிரிப் புலியூருக்குக் கிழக்கே கெடிலத்தின் கிழக்குக் கரையிலும் வடக்குக்கரையிலும் உள்ளது. கெடிலம் ட போல் வளைந்து புதுப்பாளையத்தைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. இதன் மேற்கு எல்லையும் தெற்கு எல்லையும் கெடிலம்; வடக்கு எல்லை மஞ்சக் குப்பம் பெருவெளித்திடம் (மைதானம்); கிழக்கு எல்லை செயின் டேவிட் கோட்டைப் பகுதி. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அரசினர் கலைக்கல்லூரி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, இரண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள், நகராட்சித் தலைமையலுவலகம், மாவட்ட மைய நூலகம், அரசுக் கருவூல அலுவலகம், சிறு நீதி மன்றம், ஒரு திரைப்பட மாளிகை, சிறந்த உணவு விடுதிகள், சில அலுவலகங்கள் முதலியவை உள்ளன. கெடிலக்கரையில் பகவந்த தயானந்த சுவாமிகள் மடம் உள்ளது. கோவா கத்தோலிக்க சபையினரால் 1884இல் கட்டப்பட்ட ‘ரோசரி சர்ச்’ என்னும் மாதா கோயில் இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாளையம் பகுதியில் கெடிலத்தின் பாலத்துக்கு வடபுறம் ஆற்றின் கிழக்குக் கரையில் ‘பிருந்தாவனம்’ என்னும்