பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

409



தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கடலூர் - சிதம்பரம் பாதையில் ஆலப்பாக்கத்திற்கு அருகிலுள்ள மேட்டுப் பாளையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. தொலைவு சென்றால் இவ்வூரை அடையலாம். கடலூர் - குண்டியமல்லூர் பேருந்து வண்டிப் பாதையில் பெருமாள் ஏரிக்கரையில் ஆயத்துறையில் இறங்கினால் அரை கி.மீ. தொலைவில் திருத்தினை நகர்ச் சிவன்கோயில் தென்படும். இவ்வூர் மக்கள் தொகை: 2,170.

இவ்வூர்ச் சிவன்கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது. நாவுக்கரசரும் ஞானசம்பந்தருங்கூட இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது; ஆனால், அவர்களின் பதிகங்கள் கிடைக்கவில்லை. இறைவன் பெயர்: திருந்தீசுரர்; இறைவி பெயர்; ஒப்பிலாநாயகி, மரம்: கொன்றை.

இவ்வூர்த் தொடர்பாகச் சுவையான ஒரு வரலாறு கூறப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். சிவன் ஒரு துறவியாய் அங்கே வந்து அவனிடம் உணவு கேட்டார். அவன் வீட்டிற்குச் சென்று உணவு ஆக்கிக் கொண்டு மனைவியுடன் வந்தான். அதற்குள் வெற்று நிலத்தில் தினை விளைந்து முற்றியிருந்தது. இஃது இறைவன் செயல் என அறிந்து வியந்து மனைவியுடன் இறைவனை வழிபட்டான். இதனால் ஊருக்குத் ‘தினைநகர்’ என்னும் பெயர் ஏற்பட்டதாம். இன்றும் இவ்வூர்க் கோயில் இறைவனுக்குத் தினையமுது படைக்கப்படுகிறது. இந்தவரலாறு கோயிலின் தென்புறச் சுவரில் சிற்பமாகச் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் இன்னும் பல சிற்பங்கள் உள்ளன.

இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. 1517இல் வெட்டப்பட்ட விசயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டொன்று, அவர் அளித்த அறக்கட்டளை பற்றியும், அவர் தென்னாட்டில் பெற்ற வெற்றிகள் பற்றியும், விவரிக்கிறது. அந்தக் காலத்தில் பெருவிழாக்களின் முதல் நாட்களில், தெருக்கள் துப்புரவாயுள்ளனவா எனக் காணும் முறையில் ‘திருநாவுக்கரசர் திருவீதி உலாவரும் திருவிழா நடைபெற்றதாக இந்த ஊர்க் கல்வெட்டொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் பெரிய நாகசுரக் கலைஞர் ஒருவர் பல்லாண்டுகட்கு முன் வாழ்ந்தார்; அவர் தீர்த்தனகிரி சின்னசாமி என மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

வடலூர்

வடலூரை அறியாத தமிழர் இருக்க முடியாது. இவ்வூர், அரசுக் குறிப்புகளில் பார்வதிபுரம் எனப் பெயர்