பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

419



மொழி(கள்)

மதங்கள், இனங்கள் என்று பன்மையில் தலைப்பு இட்டதைப் போல ‘மொழிகள்’ எனப் பன்மையில் தெளிவாகத் தலைப்பு இட உள்ளம் ஒருப்பட வில்லை. மொழிகள் என்று பன்மையில் தலைப்பு இட்டாலும் பொருந்தக் கூடிய நிலைமை இன்று உள்ளது. கெடில நாட்டின் பெரும்பான்மையானமொழி இந்தக் காலத்திலும் தமிழ் மொழிதான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இங்கே தமிழ் மொழியேயன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளும் செளராஷ்டிரம், மராத்தி, இந்தி, உருது ஆகிய வடஇந்திய மொழிகளும் ஒரு சில பிரிவினரால் பேசப்படுகின்றன. கெடிலநாடு முழுதும் பரவலாக ஆங்கில மொழியும், கடலூர் வட்டத்தின் வடக்குப் பகுதியை ஒட்டிய பழைய பிரெஞ்சுப் பகுதியில் பிரெஞ்சு மொழியும் நடமாட்டத்தில் உள்ளன.

பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறாமல் தொன்றுதொட்டு இங்கேயே வழி வழியாக வாழ்ந்துவரும் மக்கள் நாட்டு மொழியாகிய தமிழ் மொழி பேசுகின்றனர். தமிழர்க்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் தெலுங்கர்களைக் குறிப்பிடலாம். ஆந்திரத்திலிருந்து விசயநகர மன்னர்களும் அவர்களின் மேலாட்சியின் கீழ் நாயக்கர்களும் வந்து இந்நாட்டையாண்ட போது தெலுங்கர்கள் மிகுதியாக இங்கே வந்து குடியேறினர்; தெலுங்கு மொழியின் மேலாட்சி அப்போது ஓங்கியிருந்தது. இப் பகுதியில், ரெட்டியார், நாயடு எனப்படும் நாயக்கர், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தாணியர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார், ஒட்டர், சக்கிலியர், குறும்பர் முதலிய இனத்தவர் தெலுங்கு பேசுகின்றனர். பிராமணர், கம்மாளர், இடையர், வண்ணார், இருளர் முதலிய இனங்களிலும் தெலுங்கு பேசும் பிரிவினர் உளர். தமிழர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ ஒரு மொழியினர் போலவே ஒன்றி வாழ்கின்றனர். தேவாங்கருள் தெலுங்கு பேசுபவரேயன்றி கன்னடம் பேசுபவரும் உள்ளனர். மைசூர்ப் பகுதியிலிருந்து வந்து வாழும் இலிங்கதாரிகள் எனப்படும் வீரசைவர் கன்னடம் பேசுகின்றனர். தமிழ்நாட்டு வீர சைவர்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். கேரளத்திலிருந்து மலையாளிகள் பலர் வந்து குடியேறியுள்ளனர்.

வடக்கேயிருந்து முகமதிய மன்னர்கள் இங்கே வந்து ஆண்டபோது அவர்களுடன் உருது, அரபு ஆகிய மொழிகளும் வந்தன. முகமதியர்களும் நிரம்ப வந்து குடியேறினர்; அவர்கள்