பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

கெடிலக்கரை நாகரிகம்


அமாவாசை - சஷ்டி ஆகிய காலங்களில் சிற்சிலரும், வாரந்தோறுமே திங்கள் - செவ்வாய் - வெள்ளி - சனி ஆகிய கிழமைகளில் சிற்சிலரும் நோன்பு கொள்கின்றனர்.

மார்கழித் திங்கள் முழுதுமே பெண்கள் வைகறை இருட்டிலேயே நீராடி, தெரு முற்றத்தைத் தூய்மை செய்து விதம் விதமான அழகிய கோலங்கள் போட்டு அணி செய்வர். பெற்றோர்கள் சிறார்களை எழுப்பிப் படிக்கச் செய்வர். சில ஊர்களில் வழிபாட்டுக் குழு (பஜனை) ஆடல் பாடல்களுடன் ஊர் சுற்றி வரும். பண்டாரம் சங்கு ஊதிச் செல்வார். குடு குடுப்பைக் காரர்கள் நல்ல வாக்கு சொல்லிக் கொண்டு போவர். ஒரு சிலர் பறை முழக்கிச் செல்வர். கோயிலில் மணி முழங்கும்; பூசனையும் நடைபெறும் வைகறை வழிபாட்டிலேயே சுண்டல் முதலியன வழங்கப் பெறும். கோயிலில் ஒரு நாளைக்கு ஒரு வீட்டார் ‘உபயம்’ நடத்துவர். இதற்குத் திருப்பள்ளியெழுச்சி உபயம்’ என்பது பெயர். இவ்வாறாக மார்கழித் திங்களின் ஒவ்வொருநாள் வைகறையும் மிக்க கலகலப்பாயிருக்கும். இந்த மார்கழி வைகறைகளில் பெண்கள் கொள்ளும் நோன்பு பாவை நோன்பு’ எனப்படும் என்னும் செய்தி இலக்கியம் கண்ட செய்தியாகும். ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சியும் அந்தக் கால மக்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. இப்போதோ, ‘அப்படியென்றால் விலை என்ன?” என்று கேட்போர் பலர் உளர்.

கோயில் திருவிழாக்கள்

பல ஊர்களிலும் - பல்வேறு கோயில்களிலும் பின்வருமாறு பல்வேறு வகைத் திருவிழாக்கள் நடைபெறும்; சில விழாக்கள் சில ஊர்களில் நடைபெறா வேறு சில ஊர்களில் நடைபெறும்.

சித்திரைத் திங்களில் புத்தாண்டு முதல் நாள் விழா பெருமாள் கோயிலில் (திருவயிந்திரபுரம்) பத்து நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) - பருவத்தில் தேர் ஒடுதல் - வசந்த உற்சவம் என்னும் இளவேனில் விழா - சதய நாளில் (திருவதிகை) அப்பர் விழா.

வைகாசித் திங்களில் (திருப்பாதிரிப் புலியூர்) பத்து நாள் பெருவிழா - விசாகத்தில் தேர் ஓடுதல்.

ஆணித் திங்களில் நடராசன் தரிசனம் - ஆணித்திரு மஞ்சனம்.