பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

449


வேப்பிலை பிணிகளைப் போக்கும் - பேய் பிசாசுகளை ஓட்டும்; இது தெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.

நல்ல கண் பட்டால் நல்ல வளர்ச்சி இருக்கும்; கெட்ட கண் பட்டால் எல்லாம் கெட்டுப் போகும். கெட்ட கண் படுதலுக்குத் ‘திருஷ்டி விழுதல்’, ‘கண்ணேறு விழுதல்’ என்றெல்லாம் பெயர் சொல்லப்படுகிறது. ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக் கூடாது’ என்பது பழமொழி. கண்ணேறு கழிப்பதற்காகத் தாய்மார்கள் ஏதாவது சுற்றிப் போடுவர்.

வெள்ளிக் கிழமையில் தம் வீட்டுப் பொருளைப் பிறர்க்கு அளித்தால் திருமகள் போய் விடுவாள். சிலர் செவ்வாய்க் கிழமையிலும் சிலர் ஞாயிற்றுக்கிழமையிலுங் கூட அளிக்க மாட்டார்கள். இந்தக் கிழமைகளில் வீட்டுத் தோட்டத்திலுள்ள குப்பை எருவை அப்புறப்படுத்தார். எந்தக் கிழமையிலுமே பொழுது சாய்ந்து விளக்கு ஏற்றி விட்டாலும் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். இரப்பவர்க்குப் (பிச்சைக்காரருக்குப்) பகல் பன்னிரண்டு மணி ஆய்விட்டால் அரிசி போடமாட்டார்கள். அதன் பின்னர், ஆக்கிய உணவே போடப்படும். வெற்று ஏனத்தில் பிச்சை போடப் பின் வாங்குவர். சிறப்பு நாள்களில் கடவுளுக்குப் படைத்தபின் உணவுப் பொருள் தவிர, வேறு எப்பொருளும் இரவல் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு வெளியூர் செல்லார். எவருமே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டால் வெளியூர் செல்லமாட்டார்கள்; அப்படியே சென்றாலும் இரவு படுக்கைக்கு வீட்டிற்கு வந்துவிடுவர். வீட்டிலிருந்து யாரேனும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றபின் அன்று யாருமே வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கமாட்டார்கள். மேற் சொன்னவற்றிலிருந்து மீறி நடந்தால் தீமை விளையும் திருமகள் போய்விடுவாள் என்பது நம்பிக்கை.

பிறந்த கிழமையிலும் செவ்வாய்க் கிழமையிலும் சனிக் கிழமையிலும் புதிய செயலோ - நல்ல செயலோ தொடங்கவோ செய்யவோமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமையில் ஊருக்குப் புறப்பட்டால் நாய் படாதபாடு படவேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் உள்ளது. வெள்ளிக் கிழமையை வளர்ந்த நாள் என்பர்; அதனால் அந்நாளில் புதிதாக மருந்து உண்ணார்; இழுபறியான செயல்களையும் தொடங்கார். புதன் கிழமையில் புற்றில் உள்ள பாம்பும் வெளியே புறப்படாது என்பது சிலர் கொள்கை.

வீட்டில் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவராம். தெருவில் நாய் அழுதால் சாவுச்செய்தி வருமாம். வடக்கே தலை

கெ.29