பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

கெடிலக்கரை நாகரிகம்


‘பசங்க குட்டிகள்’ என்றும் இங்கே அழைப்பர். மிகுந்த குழந்தைகள் உடையவர் ‘பிள்ளை குட்டிக்காரர்’ எனப்படுகிறார்.

மரபு வழக்குகள்

இந்தப் பகுதியில், குறிப்பிட்ட ஒரு கருத்தை அதற்குரிய நேர்ச் சொற்களால் கூறாமல், சுவையான மாற்றுச் சொற்களால் சொல்லும் மரபு வழக்குகள் சில வருமாறு:- முதலில் நேர்ச் சொற்களும் பின்னர் மாற்றுச் சொற்களும் தரப்படும்.

இளம் வயதில் பிறந்த பிள்ளை; காலம் காத்தாலே பிறந்த பிள்ளை.

ஏமாற்றுதல், வஞ்சித்தல்: காதுகுத்தல், வாயிலே போட்டுக் கொள்ளுதல், தில்லாமுல்லு திருவாதிரை தெத்து மாத்து.

ஏமாற்றுக்காரன்: கேப்மாறி, முடிச்சிமாறி, மூணுதாளு. இறத்தல்: கண்ணை மூடிக் கொள்ளுதல், வாயைப் பிளத்தல், கட்டையைக் கீழே போட்டு விடுதல், பயணப்பட்டு விடுதல், போக வேண்டிய இடத்திற்குப் போய் விடுதல், மெய்யூருக்குப் போதல், அந்த லோகம் போதல், வைகுண்ட பதவியடைதல், கைலாய பதவியடைதல், சட்டையைக் கழற்றிக் கீழே போட்டு விடுதல், கட்டையை நீட்டி விடுதல், காலைக் கிளப்பிக் கொள்ளுதல், நிறைவேறி விடுதல்.

பெரிய திருடன்: முழுப் பாசுருட்டி

பெரிய புளுகன் : அல்டாப்பு, வண்டிப் புளுகன், மூட்டைப் புளுகன், அரிச்சந்திரன் வீட்டுக்கு அண்டை வீட்டுக்காரன்.

சிறை செல்லல்: பள்ளிக்கூடம் படித்தல், மாமனார் வீட்டிற்குச் செல்லல், கம்பி எண்ணுதல்.

கொஞ்சம் நகரு: ஒரு நெல்லுகனம் புரளு. கொஞ்சம்: ரவபோதும், ராவோண்டு (ரவையளவு). வாய்க்குப் புகையிலை கொடு: நாலாவது கொடு, (வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, புகையிலை என்ற வரிசையில் புகையிலை நான்காவது அல்லவா?)

இறங்குதல்: இழிதல். வேகமாய் நட கொஞ்சம் காலைத் துரக்கிப் போடு. எறிதல்: கடாசுதல், கடாவுதல். -

தொந்தி பெருத்தவர்: முன்பளுவு, மானம் பார்த்தான்.