பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

459



காணாது போதல்: தாரை வார்ந்து போதல்.

திருட்டுத்தனமாக ஏமாற்றி எடுத்துக் கொண்டு போதல்: அடித்துக் கொண்டு போதல், தட்டிக் கொண்டு போதல், சுருட்டிக் கொண்டு போதல், கண்ணிலே மிளகாய்ப் பொடி தூவுதல்.

இழத்தல், பறிகொடுத்தல்: தலை முழுகல், தொலைத்துத் தலை முழுகல், எள்ளும் தண்ணியும் இறைத்தல், அவன் இழவுக்கு எள்ளும் தண்ணியும் இறைத்து எட்டாம் துக்கம் படைத்துவிட்டேன் என்று கூறுதல்.

சகுனத் தடையாயிற்று: கட்டுது, தாங்குது.

எதிர்பாராவிதமாய்: திடும்பிரவேசமாய்.

தற்செயலாய்: அகஸ்மாத்தாய்.

இவ்வாறு இன்னும் பல்வேறு மரபு வழக்காறுகள் உள்ளன. சிற்றுார்களில் சிறியவர்கள் பெரியவர்களை முறை சொல்லி அழைப்பதன்றி, மூத்தவர் - இளையவர் - நடுவிலவர் என்றும் அழைப்பர். பெண்களைப் பெரியவள் சின்னவள் என்று அழைப்பதன்றி, அவர்களின் பிறந்த ஊர்ப் பெயராலும் மக்கள் அழைக்கின்றனர். பொதுவாக ஒருவரையொருவர் வீட்டுப் பெயரால் குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது; சிற்றுார்களில் வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும்; மற்றும் ஒருவரையொருவர் புனைபெயரிட்டு அழைத்துக் கொள்வதும் உண்டு; இந்தப் புனைபெயர் தாழ்வாகவும் இருக்கலாம்; அதற்காக எவரும் வருத்தப்படுவதில்லை. கணவரின் தமக்கையைச் ‘சின்னம்மா’ என்று அழைக்கும் வழக்கம் இப்பகுதியில் உண்டு.

சில மாவட்டத்தினர் ‘ழ’ என்னும் எழுத்தைச் சரியாக ஒலிப்பதில்லை. தென்மாவட்டத்தினர் சிலர் வாழைப் பழம் என்பதை ‘வால்ப் பலம்’ என்பர். வடக்கே சிலர் குழந்தையைக் ‘கொயந்தை’ என்றும், கழுத்து என்பதைக் கெயுத்து’ என்றும் ஒலிப்பர். ஆனால், திருமுனைப்பாடி நாட்டினர் வாழைப் பழம், குழந்தை, கழுத்து என ழகரத்தைத் தூய்மையாக ஒலிக்கின்றனர். இந்தப் பகுதியில் நான் என்பது ‘நானு’ எனப்படுகிறது. சில ஊர்களில் நீ என்பது ‘நீனு’ எனப்படுகிறது.

இவ்வாறு இன்னும் பல்வேறு வட்டார மரபு வழக்குகள் காணப்படுகின்றன. அனைத்தையும் விரிப்பிற் பெருகும்.