பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

461


"ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
வெள்ளிக்கு வெள்ளி
விடியத் தலைமுழுகி
அள்ளி மிளகுதின்று
அனந்த விரத மிருந்து
கேதாரி நோன்பாலே
கிடைச்ச திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
ஆறுஇரண்டு காவேரி
அதன் நடுவே சீரங்கம்
சாமி கிருபையாலே
தந்திட்ட திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
நித்திரைபோ நித்திரைபோ
நேரமாச்சு நித்திரைபோ
சிற்றிலைபூந் தொட்டிலிலே
சிகாமணியே நித்திரைபோ
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
"கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
கண்ணான கண்ணுக்குக்
கண்ணாறு வந்ததென்ன
சுண்ணாம்பு மஞ்சளுமாய்ச்
சுற்றி எறிந்திடுவோம்
வெற்றிலையும் பாக்கும்
வீசி எறிந்திடுவோம்
ஆனையைக் கண்டுநீ
அலறி அழவேண்டாம்
அதட்டியே ஓட்டிவிட்டோம்
அஞ்சுகமே கண்வளராய்
பூனையைக் கண்டுநீ
புலம்பி அழவேண்டாம்
ஈனமற ஒட்டிவிட்டோம்
இளவரசி கண்வளராய்