பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

485



வெள்ளிநிலா காயுதுபார் வீதிஒளி பாயுதுபார்
பள்ளமேடு பார்த்து நீங்கள் பாய்ந்து போவீர் பாதையிலே
வெள்ளம்போல் எதுவரினும் வெட்டி செல்வீர் தோழர்களே
வீடுசெல்வோம் விரைவாக வெற்றிநடை போடுங்கடா
ஆடிசெல்லும் காதுமணி அலங்கரிக்கும் கழுத்துமணி
தேடிவரும் குளம்போசை தேன்பாயும் காதுக்குள்ளே
செல்லுங்கடா சீக்கிரமாய் துள்ளிவிழும் காளைகளா
ஏய் ஏய் இந்தா போ போ..."

12. பரதவர் பாடல்

"விடிவெள்ளி நம்விளக்கு - ஐலேசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலேசா
அடிக்கும் அலை நம்தோழர் - ஐலேசா
அருமை மேகம் நமதுகுடை - ஐலேசா
பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலேசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலேசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலேசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலேசா
பின்னல்வலை அரிச்சுவடி - ஐலேசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருள்கள் - ஐலேசா
மின்னல் இடிகாணும்கூத்து - ஐலேசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலேசா
முழுநிலாதான் நம்கண்ணாடி - ஐலேசா
மூச்சடக்கி நீந்தல்யோகம் - ஐலேசா
தொழும் தலைவன்பெருவானம் - ஐலேசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலேசா"

(இந்தப் பாடலைப் புத்தகத்தில் படித்து மனப்பாடம் செய்துகொண்டதாக ஒருவர் கூறினார்.)

இவ்வாறு இன்னும் பல்வேறு வகைப் பாடல்கள் இப் பக்கத்தில் வழக்காற்றில் உள்ளன. இன்னும் ஊர் வாரியாகத் திரட்டினால் பாடல்கள் ஒரு தனி நூலாகப் பெருகி விரியும். சில ஊர்ப் பக்கத்துப் பாடல்கள் மட்டுமே ஒரளவு இங்கே தரப்பட்டுள்ளன. பாடல்களைப் போலவே கெடில நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளும் ஒரளவே தரப்பட்டுள்ளன. இவற்றுள் சில தமிழக முழுவதற்கும் பொதுவாயிருப்பினும், கெடிலக்கரை நாட்டிலும் இவ் வாழ்க்கை முறைகள் உள்ளன என அறிந்து கொள்ளலாம்.