பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. கல்வி - கலைத்துறை


கல்வி

ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் கற்றவர்கள் மிக்கிருந்தனர். மிக்கிருந்தனர் என்றால், மற்ற மாவட்டங்களை நோக்க மிகுதியே தவிர, இன்றைய நிலையை நோக்க மிகவும் குறைவே. 1822ஆம் ஆண்டில் தமிழகத்தில் கற்றவர் தொகையை ஆராய்ந்து கணக்கிடுவதற்காகத் தாமஸ் மன்ரோ (Sir Thomas Munro) என்பவர் தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. அந்த ஆராய்ச்சியினால், தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலுமே கற்றவர் மிகுதி என்பதும், தஞ்சை மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.0% (நூற்றுக்கு இரண்டு) என்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.3% என்பதும் தெரிய வந்தன. பின்னர்த் தமிழகத்தில் ஏற்பட்ட எத்தனையோ துறைக் கல்வி வளர்ச்சியில் தென்னார்க்காடு மாவட்டம் வேறு சில மாவட்டங்களினும் பின் தங்கியது என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக, மற்ற மாவட்டங்களின் தலைநகர்களிலும் உள்நகர்களிலும் பல்லாண்டுகளாகக் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் முதலியன மிக்க எண்ணிக்கையில் நடைபெற்று வந்தும், தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் கலைக்கல்லூரி ஏற்பட்டது; மாவட்டத்தில் சிதம்பரம் தவிர மற்ற நகர்களில் இதுவரை கலைக்கல்லூரி ஏற்படவில்லை; இப்போதுதான் சில நகரங்களில் உருவாகத் தொடங்கியுள்ளது. இந் நிலையைக் காணுங்கால், இம் மாவட்டத்தின் பின்தங்கிய நிலை நன்கு புலப்படுகிறது.

ஆனால், கல்லூரிகளின் எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களினும் தென்னார்க்காடு மாவட்டம் பின் தங்கியிருக்கும் எளிய நிலையை ஈடு செய்யும் முறையில் சிதம்பரத்தில் பல்லாண்டுகளாக ஒரு கல்லூரி அன்று-ஒரு பல்கலைக் கழகமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் அருட்பெருக்கால் தோன்றியுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை