பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

487



வைத்துப் பார்க்கும்போது, தென்னார்க்காடு மாவட்டம் கல்வித் துறையில் சென்னைக்கு அடுத்தபடி சிறப்பிடம் பெற்றுள்ளது என்று சொல்லலாம். மற்றும், அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதனால்தான், கடலூரில் இவ்வளவு நாள் கல்லூரி தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. கடலூர் வட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாடோறும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குப் புகைவண்டியில் சென்று கல்வி கற்றுவந்தது நினைவுகூரத்தக்கது.

கடலூர்க் கல்லூரிகள்

கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் ஆண்கள் கலைக் கல்லூரியும் 1967 ஆம் ஆண்டில்தான் பெண்கள் கலைக் கல்லூரியும் ஏற்பட்டிருப்பினும், சென்ற நூற்றாண்டிலேயே இங்கே இரண்டு கலைக்கல்லூரிகள் தோன்றி நடைபெற்று வந்தன என்பதை மறந்து விடுவதற்கில்லை. கடலூரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி அரசினரால் தோற்றுவிக்கப்பட்டு 1902ஆம் ஆண்டுவரை நடைபெற்றுப் பின்னர் மறைந்து விட்டது. அடுத்து, 1884ஆம் ஆண்டில் ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ (St Joseph’s College) என்னும் பெயரில் தனியார் கலைக்கல்லூரி ஒன்று தோன்றி 1909ஆம் ஆண்டு வரை இயங்கிப் பின்னர் எடுக்கப்பட்டுவிட்டது. இவ்விரு கல்லூரிகளையும் வைத்துக் காணுங்கால் சென்ற நூற்றாண்டில் கல்வித் துறையில் கடலூர் பெற்றிருந்த தலைமைநிலை புலனாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

கடலூர்க் கல்லூரிகளை அடுத்து இம் மாவட்டத்தில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் 1920ஆம் ஆண்டு ஒரு கலைக்கல்லூரியும், பின் ஓர் இசைக் கல்லூரியும், 1927இல் தமிழ்க் கல்லூரி, தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வடமொழிக் கல்லூரி முதலியனவும் தம் அன்னையார் மீனாட்சியம்மை பெயரால் தொடங்கி நடத்தினார்கள். இவை 1929இல் ஒருங்கிணைக்கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறின; இன்று இப் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ வகைக் கல்விப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. வள்ளல் அண்ணாமலை செட்டியார் புகழ் வளர்க!

மயிலம் தமிழ்க் கல்லூரி

அடுத்து, இம்மாவட்டத்தில் மயிலம் என்னும் ஊரில் சிவத்திரு, சிவஞான பாலைய அடிகளாரால் 1938இல் நிறுவப்