பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

55


அப்பர் கரையேறியதாகக் குறிப்பிடப்படும் இடத்தில் ஓர் ஓடை ஊண்டு. நாற்பதாண்டுகட்கு முன்பு பெரிய ஓடையாகக் காட்சியளித்த அந்த நீர்ப்பகுதி, நாளடைவில் தூர்ந்து பாழடைந்து இப்போது ஒரு சிறிய குளத்தின் அளவிற்குச் சுருங்கி விட்டது, இந்தக் குளம் முன்னும் பின்னும் கால்வாய்களால் தொடர்பு கொண்டுள்ளது.

இந்தக் குளத்தில் திருவிழாவன்று தெப்பம் கட்டிமிதக்கும். தெப்பத்தில் அப்பர் திருவுருவம் ஏற்றப்பட்டுக் குளத்தைச் சுற்றிச்சுற்றி வந்து, குறிப்பிட்ட சுற்றுக்கள் முடிந்த பின்னர்க் கரையேறும். அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே போடப் பட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் மரத்தெப்பத்திலே கருங்கல்லும் கட்டப்பட்டிருக்கும். அப்பர் திருவுருவத்துடன் தெப்பத்தில் ஏறிக்கொண்டிருக்கும் ஓதுவார்கள், அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே எறியப்பட்டபோது பாடிக் கொண்டே கரையேறியதாகக் குறிப்பிடப்படும் ‘சொற்றுணை வேதியன்’ என்னும் தேவாரப் பதிகத்தைப் பண்ணோடு இசைத்துப் பாடுவது மிகவும் உருக்கமாக இருக்கும்.

குளத்தைச் சுற்றி எட்டின மட்டும் மக்கள் தலைகள் தெரியும். அந்தப் பகுதியினர்க்கு இது ஒரு பெரிய திருவிழாவாகும். மலையுடன் தோப்புக்களும் தோட்டங்களும் கழனிகளும் பழனங்களும் ஓடைகளும் கால்வாய்களும் நிறைந்த இன்பமான இயற்கைச் சூழ்நிலைக்கிடையே, தென்றல் வீசும் சித்திரை இளவேனிற் காலத்தே, தேவாரப் பண் இசைக்க அப்பர் திருவுருவம் தெப்பத்தில் மிதந்து கொண்டிருக்கும் காட்சி, அன்புச் சுவையுடன் அழகுச் சுவையும் கலைச்சுவையும் கலந்ததொரு கண்கொள்ளாக் காட்சியாகும். நாளடைவில் பாழடைந்து வந்து கொண்டிருந்த இந்தத் தெப்பக்குளம் 1959 ஆம் ஆண்டில் சீர்திருத்தப்பட்டதுடன், அப்பர் அங்கேதான் கரையேறினார் என்பதை அறிவிக்கும் அறிகுறிச் சான்றாகக் குளத்தின் கரையில் அழகிய ஒரு நினைவு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. மறுபக்கமுள்ள படத்தில் இதனைக் காணலாம்.

படத்தில் திருக்குளத்தையும் குளக் கரையில் மண்டபத்தையும் காணலாம். படத்தில் தென்னஞ்சாலைகளும் சோலைகளும் திகழ்வதையும் காணலாம். இந்தத் துறையில் ஆர்வம் உடையவர்கள் கடலூர் சென்றால் இந்த இடத்தையும் சென்று பார்ப்பது நலம்.