பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கெடிலக்கரை நாகரிகம்


செவிவழிச் சான்று

மற்றும், இப் படத்தில் நம் வலக்கைப் பக்கமாக, நினைவு மண்டபத்திற்கு அருகில் ஒரு சிறு ஓட்டுக் கொட்டகை தெரிவதைக் காணலாம். அது வேறொன்று மன்று வண்டிப்பாளையம் சுடுகாடுதான். அக் கொட்டகையில் பிணங்களைச் சுடுவதும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் புதைப்பதும் வழக்கம். இந்தச் சுடுகாடு வண்டிப்பாளையம்

ஊருக்கு தெற்கே மிக அண்மையில் - ஒரு பர்லாங்கு தொலைவிற்குள் உள்ளது. இந்தக் காலத்தில், கிறித்துவர்களின் கல்லறைகள் ஊரையொட்டியும், ஊருக்குள்ளேயுங்கூட உள்ளன; ஆனால் அந்தக் காலத்தில் இப்படியன்று; ஊருக்குச் சேய்மையிலேயே சுடுகாடு இருக்கும். நிலைமை அப்படியிருக்க, வண்டிப்பாளையம் சுடுகாடு ஊரையொட்டி இருப்பதேன்?

வண்டிப் பாளையத்தானாகிய நான் சிறு வயதில் ஒரு நாள் எங்கள் வீட்டுத் தெருக்குறட்டில் சிறுவர் பலருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன் விளையாட்டு முடிந்து வெற்றுப் பேச்சு தொடங்கியது. இளஞ்சிறார்களின் பேச்சு நூற்றுக்கு நூறு எதிர்காலப் பயன் உடையதாகும். அப் பேச்சில் வியப்பூக்கமும் (Curiosity) ஆராய்வூக்கமும் விரவியிருக்கும். இளஞ்சிறார்களாகிய நாங்கள் பேய்கதை - பிசாசு கதை - திருடன் கதை - பாம்பு கதை முதலிய பல கதைகளும் பேசிவிட்டுச் சுடுகாட்டுக் கதைக்கு வந்தோம். இந்தக் கட்டத்தில் எங்களுள் ஒருவன் மற்றவர்களை நோக்கி, ‘நம் ஊருக்கு (வண்டிப்பாளையத்திற்கு) அருகில் சுடுகாட்டை ஏன் அமைத்தார்கள்? அந்தப் பக்கம் போக அச்சமாயிருக்கிறதே!'