பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

57


என்று முன்னோர்களை நொந்து வைபவன் போல் ஒரு கேள்வி கேட்டான். அதற்கு மற்றவர்களிடமிருந்து, ‘சுடுகாடு கிட்ட இருந்தால் பிணத்தைத் தூக்கிக் கொண்டு கால் கடுக்க நெடுந்தொலைவு போக வேண்டியதில்லை’ என்றும், ‘ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் பிணத்தைச் சீக்கிரம் அடக்கம் செய்து விட்டு வந்து சீக்கிரம் சாப்பிடலாம்’ என்றும் ‘கிட்டவே புதைத்தால் அடிக்கடி போய்ப் பார்த்து விட்டு வரலாம்’ என்றும் பலவிதமான பதில்கள் வந்தன. அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த என் தந்தையார் எங்களை நோக்கி, ‘நம் ஊரில் ஏன் சுடுகாடு அருகில் இருக்கிறது தெரியுமா? அந்தக் காலத்தில் நம் ஊருக்குப் பக்கத்தில் கெடிலம் ஓடிற்றாம், ஆறு ஓடும் இடங்களில் ஆற்றங்கரையில் கடுகாடு அமைப்பது வழக்கம். அப்படியே நம் ஊர்ச் சுடுகாடும் கெடிலக்கரையில் அமைக்கப்பட்டதாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘அப்படியென்றால் அந்த ஆறு இப்போது எங்கே?’ என்று ஒரு பொடியன் ஒரு போடு போட்டான். ‘ஆறு வெள்ளம் அடித்து வேறு பக்கம் திரும்பி விட்டதாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள்’ என்று என் தந்தையார் கூறினார். நான் ஓரளவு பெரியவனானதும் இதுபற்றி என் தந்தையாரைக் கேட்டுள்ளேன். ‘இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்’ என வழி வழியாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாக அவர் கூறினார்.

இதுகாறுங் கூறியவற்றிலிருந்து, இப்போது திருப்பாதிரிப் புலியூருக்கு வடக்கே ஓடும் கெடிலம், அப்போது திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப் பாளையத்தை யொட்டி, ஓடிக் கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. இதற்குச் செவி வழி வரலாற்றுச் சான்றுகளேயன்றி, எழுதி வைக்கப்பெற்றுள்ள இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தொல்காப்பியத் தேவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் இதற்குத் தக்க அகச்சான்று கிடைத்துள்ளது வருமாறு:

“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங்
கயல்விழி நிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுந்
திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெப்
பரமர்தாள் பணிவது வரமே." (45)