பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கெடிலக்கரை நாகரிகம்


“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியிரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே
மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துபிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே."
(100)

என்பன அந்நூற் பாடல்கள். இப் பாடல்களிலுள்ள ‘கெடில மாநதியதன் வடபால் ‘கெடிலத்து வடபாலே’ என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஒடிக் கொண்டிருந்த போது ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்’ என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்டதென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப் புராணம் கூறுகிறது. அது வருமாறு:

“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப் புலியூர் இறைவனை வணங்குவதற்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தார். திருப்பாதிரிப் புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலேயிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடியதாம் என்செய்வார் மணிவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும்