பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

59


மிகக் கடுமையா யிருந்ததால் தெப்பமும் விடப்படவில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட முடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மணிவாசகர்மேல் இரக்கங் கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி ‘உமக்கு என்ன வேண்டும்?’ என்று அவரைக் கேட்டாராம். ‘நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப் புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, ‘ஏ கெடிலமே! நீ வளைந்து திசை மாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மணிவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஓடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப் புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம். இச்செய்தியினை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள - பின்வரும் பாடல்களால் அறியலாம்.

[1]'அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவ மாகிய பரவெளி பெரும்பற்றப் புலியூர்த்
திருவ ருட்டிற மருவியாங் கிருந்துதீம் புனலூர்
மருவு முத்தர புலிசைமா நகர்தொழ வந்தார்'
(32)
'தென்னகன் கரை யிருந்தனர் யாவருஞ் சிறந்த
மன்னு முத்தர தீரத்தின் வகை குறித் தார்க்குத்
தன்னை யொப்பருங் கலங்களுந் தெப்பமுஞ் சாரா
வன்ன பேருடற் கும்பத்தி னணைத்தவு மணையா'
(35)
'உத்த ரத்திருப் புலிசைமா நகர்தொழ வுற்றேன்
தத்து வெண்புனல் சாகரத் தோடெதிர் தயங்கி
முத்தம் வாரியெற் றலைகளு மலையென முயங்கச்
சித்த சாமியிவ் ஆறுஇடை தடுத்ததென் செய்கேன்'
(39)
'உயிரும் யாக்கையும் மகிழ்விக்கும் வல்லப முடையீர்
தயிரின் வெண்ணெய்போல் மறைந்தருள் இறைவர் நீர்
(தாமே

  1. 32. பெரும் பற்றப் புலியூர் - சிதம்பரம்; உத்தர புலிசை- திருப்ப பாதிரிப் புலியூர். 35. உத்தர தீரம் - வடகரை, 39, சாகரம் - கடல்.