பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

67


முனிவர், ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் வீணே வெறும் பொய் புளுகியிருக்க முடியாதல்லவா? ஒன்றாவது இருந்தால்தானே ஒன்பதாகச் சொல்ல முடியும்?

மாணிக்கவாசகருக்காகச் சித்தர் கட்டளையிட அதனால் கெடிலம் திசைமாறாவிட்டாலும், உண்மையில் என்ன நடந்திருக்கலாம்? மாணிக்கவாசகர் தில்லையிலிருந்து வடக்கு நோக்கி வந்து திருப்பாதிரிப் புலியூரை நெருங்கினபோது, வழியிலே கெடிலத்தில் வெள்ளம் ஓடியிருக்கலாம். அதனால் அவர் வெள்ளத்தின் வடிவை எதிர்பார்த்து அக் கரையிலேயே கடவுளை வேண்டிக் காத்திருக்கலாம். இந்த நேரத்தில், அவ்விடத்திற்கு மேற்கே திருவயிந்திரபுரத்தில் ஆற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு திசைமாறி ஓடியிருக்கலாம். வந்து கொண்டிருந்த வெள்ளத்தின் பெரும்பகுதி மேற்கே திசைமாறி எதிர்ப்பக்கம் திரும்பியதால் மணிவாசகர் காத்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் குறைந்திருக்கலாம். இது மாதிரி இந்தக் காலத்திலும் நடப்பதுண்டு. (சிலர், ஆற்று வெள்ளம் தங்கள் ஊரை அழிக்காமல் இருப்பதற்காக எதிர்க்கரையில் சென்று அக்கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தை அக் கரைப் பக்கம் திருட்டுத்தனமாகத் திருப்பி விடுவதும் இக்காலத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.) தண்ணீர் குறைந்து வழக்கமாகக் கடக்கக் கூடிய அளவுக்கு வரவே, மாணிக்கவாசகர் எளிதாக ஆற்றைக் கடந்து அக் கரையடைந்திருக்கலாம். வேறு பக்கம் திசை மாறிய கெடிலம் அந்தப் புதுப்பாதையிலேயே தொடர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகச் செவி வழியாக மக்களிடையே அறியப்பட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விப்பட்ட சிதம்பரநாத முனிவர் புராணத்தில் பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே, மாணிக்கவாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!

(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும் தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுதலும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மணிவாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்ட வராகவே இருந்திருப்பார். ஏன், இருவரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக்கூட கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகியிருக்கலாம்; மணிவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகி