பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. கெடிலத்தின் தொன்மை

கெடிலத்தின் தொன்மை

கள்ளக்குறிச்சி வட்டத்தில் தோன்றிக் கடலூர் கடற்கரையில் துறைமுகப் பெருமையுடன் முடியும் கெடிலம் ஆறு வரலாற்றுக் காலத்துக்கும் அப்பாற்பட்ட தொன்மை உடையதாகும். இதற்குப் பல சான்றுகள் கூறமுடியும்.

கழிமுகத்தீவு (Delta)

கெடிலம் கடலோடு கலக்கும் முக்கிய முகத்துவாரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து வடபுறமாக ஒரு கிளை பிரிந்து கடலில் கலப்பதாகவும், தென்புறமாக ஒரு கிளை பிரிந்து சென்று கடலில் கலப்பதாகவும், தென் கிளையாகிய உப்பனாற்றில்தான் கூடலூர்த் துறைமுகம் அமைந்திருப்ப தாகவும், கெடிலத்திற்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தேவனாம்பட்டினத் தீவு இருப்பதாகவும், கெடிலத்திற்கும் தென்கிளைக்கும் நடுவே அக்கரை எனப்படும் கழிமுகத் தீவு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி ஓர் ஆறு கடலில் கலப்பதற்கு முன்னால் அதிலிருந்து கிளையாறுகள் பிரிவதும், அவற்றிற்கும் கடலுக்கும் இடையே கழிமுகத் தீவுகள் ஏற்படுவதும் அந்த ஆற்றின் மிகுந்த தொன்மையை (பழைமையை) அறிவிக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சி அறிஞர்கள் (geologists) கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆற்றில் அடித்துக்கொண்டு வரப்படும் பொருள்கள் முகத்துவாரத்தில் படியப்படிய, அந்தப் படிவுகளால் முகத்துவாரப் பகுதி மேடிடுகிறது; அதனால் ஆறு நேரே சென்று கடலில் கலப்பதற்குத் தடையேற்படுகிறது; அதனால் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு முன்னால் அதிலிருந்து கிளைகள் பிரிந்து வேறு இடங்களில் கடலில் கலக்கின்றன; அதனால் கழிமுகத் தீவுகள் ஏற்படுகின்றன. இந்த அமைப்புகளைக்கொண்டு ஆற்றின் தொன்மையை அறிந்துகொள்ளலாம்.

மற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு நோக்கி விரைவாக ஒடி அரபுக் கடலில் விழும் ஆறுகள் கடலில்