14
சிந்தித்துப் பார்த்து தானே உண்மையைக்காண வேண்டியது ஒவ்வொரு மனிதனின் உரிமை மாத்திரமல்ல; கடமையும் அதுவே. பலம் கொண்டோ, பயம் காட்டியோ, இதைத் தடுக்க முயல்கிறவன் ஒவ்வொருவனும் தன் சக மனிதர்களைத் தாழ்த்தி அடிமைப் படுத்தவே செயலாற்றுகிறான்.
இது இங்கர்லால் சொன்னது. உண்மையை இதை விட அழகாக, அழுத்தமாக, யாரும் சொல்லிவிட முடியாது
வழிகாட்டிகளும் பொதுநலக் கைகாட்டிகளும்—கட்சிகளும் கட்சிக்காரர்களும்—தாங்கள் செய்வதும் சொல்வதும் சரிதானா என்று தங்கள் மனச்சாட்சியிடம் (அப்படி ஒன்று அவர்களுக்கு இருக்குமானால்!) பரிசோதனை செய்து கொள்ளட்டும்.
எல்லோருக்கும் வாழ்வதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் இல்லை. திறமைக்கும் உழைப்புக்கும் கூடத் தேவையான சந்தர்ப்பங்கள் அளிக்கப் படுவதில்லை. ஆனால், எத்தர்களும் குள்ள நரித்தனக் கள்ள நெஞ்சினரும், வன்னெஞ்சினரும், திறமையற்ற ஆடம்பரக்காரர்களும், வாய்ப்பேச்சு வீரர்களும்—கோளாறான சமுதாய அமைப்பு முறையால் மேற்படியிலும் முன்னிடத்திலும் நிற்க முடிந்திருப்பதால் —‘தலைகால் தெரியாமல்’ என்பார்களே அப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களது புல்லுருவித்தனம், அட்டைத்தனம், மிருகத்தனம் முதலான இழிதகைமைகளை யெல்லாம் யாரும் கேட்பாரில்லை. சமயத்துக்குத் தக்கபடி ‘குல்லா’ மாற்றியும், சட்டைகள் மாற்றியும் மக்களை ஏமாற்றித் தாம் வாழ விரும்புகிற—வெளிச்சம் போட்டுத் திரிகிற—வீணர்களுக்கும் அவர்களின் வீணத்தனர்களுக்கும் சாவுமணி அடிக்கப்படும் ; மக்கள் எல்லோருமே சிந்தித்து,