பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

8-ஆம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது, எனவே அவன் உத்தேசமாகக்கி பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். இவனுடைய ஆட்சிக்காலமும் சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே அடங்கி விட்டது.

பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாகிய செல்வக் கடுங்கோவாழியாதன் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்று 7-ஆம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது. ஆகவே இவன் உத்தேசமாக கி. பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.

செல்வக் கடுங்கோவின் தந்தையாகிய அந்துவன் பொறையன் எத்தனையாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு அரசாண்டான் என்று கொள்வோம். அப்படியானால் அவன் உத்தேசமாக கி. பி. 92 முதல் 112 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.

இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிந்தோம். அவன் எத்தனைக் காலம் அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு ஆட்சி செய்தான் என்று கொண்டால் அவன் உத்தேசமாகக் கி. பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம்.

யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலுக்குப் பிறகு அரசாண்ட கணைக்கால் இரும்பொறையும் இருபது ஆண்டு அரசாண்டான் என்று கருதலாம். இவன் உத்தேசம் கி. பி. 190 முதல் 210 வரையில் இவன் அரசாண்டான் எனக் கொள்ளலாம், இவனுக்குப்பிறகு கொங்கு நாட்டு அரசாட்சி சோழர் கைக்குச் சென்றது. சோழன் செங்கணான் கொங்கு நாட்டைக் கைப் பற்றி அரசாண்டான். ஏறக்குறைய 120 ஆண்டுக் காலம், கொங்கு நாடு சேர பரம்பரையில் இளைய பரம்பரையைச் சேர்ந்த பொறையர் ஆட்சியில் இருத்தது.