பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கொங்குநாடு உள் நாடாகையால் அதற்குக் கடற்கரை இல்லை; ஆகையால் துறைமுகமும் இல்லை. ஆனால், கொங்கு நாட்டை யரசாண்ட ‘பொறையர்’ சேர அரசரின் பரம்பரையாராகையால், அவர்கள் சேர நாட்டுத் துறைமுகங்களில் இரண்டைத் தங்களுக்கென்று வைத்திருந்தார்கள். அவற்றின் பெயர் தொண்டி, மாத்தை என்பன. கொங்கு நாட்டுப் பொறையர் மேற்குக் கடற்கரைத் தொண்டியைத் தங்களுக்குரிய துறைமுகப் பட்டினமாக வைத்துக் கொண்டு வாணிகஞ் செய்தனர். கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரலிரும்பொறை ‘வளை கடல் முழவில் தொண்டியோர் பொருநன்’ என்று கூறப்படுகிறான். (9-ஆம் பத்து 8:21) “திண்டேர்ப் பொறையன் தொண்டி” (அகம் 60:7) யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, “தன் தொண்டியோர் அடுபொருநன்” என்று கூறப்படுகிறான். (புறம்-17:13) குறுந்தொகை 128-ஆம் செய்யுள் “திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்று கூறுகிறது. (குறும். 128:2) யவனர் தொண்டியைத் திண்டிஸ் என்று கூறினார்கள்.

இதனால், கொங்கு நாடு சேர அரசர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம் வரையில், தொண்டித் துறைமுகம் கொங்கு நாட்டின் துறைமுகப் பட்டினமாக அமைந்திருந்தது என்று கருதலாம். பிற்காலத்தில் சோழர் கொங்கு நாட்டைக் கைப்பற்றி யரசாண்ட போது தொண்டி, கொங்குத் துறைமுகமாக அமையவில்லை,