பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

அது கல்வெட்டில் வட்டமாகவும் சில சமயங்களில் எழுதப்படுகிறது. உதாரணமாக மதுரைக்கு அடுத்துள்ள யானை மலைப் பிராமி எழுத்தில் எகர எழுத்து ஏறக்குறைய வட்டமாக எழுதப்பட்டிருப்பது காண்க. இந்த எழுத்து எகரம் என்பதில் ஐயமேயில்லை. ஐ. மகாதேவன் அவர்கள் இதை ஏ என்று வாசிப்பது சரியன்று. ஏனென்றால் இந்த எழுத்தின் உள்ளே ஒரு புள்ளி தெளிவாகக் காணப்படுகிறது. புள்ளியிருப்பதனாலே ஏகாரமன்று எகரமே என்பது தெளிவாகத் தெரிகிறது. மெய்யெழுத்துக்களும் எகர ஒகர குற்றெழுத்துகளும் புள்ளி பெறும் என்று இலக்கணம் கூறுகிறது. ஆகவே, அந்த இலக்கணப்படி இது ஏகாரம் அன்று எகரமே என்பது திட்டமாக தெரிகின்றது. (புள்ளி பெறவேண்டிய எழுத்துகளுக்குப் பெரும்பாலும் புள்ளியிடாமலே ஏட்டுச் சுவடியிலும் செப்பேட்டிலும் கல்லிலும் எழுதுவது வழக்கம். அபூர்வமாகத்தான் புள்ளியிட்டெழுதப்படுகின்றன. இந்த எகர எழுத்துக்குப் புள்ளியிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.)

அடுத்த இரண்டாவது எழுத்தைப் பார்ப்போம். இதை டி. வி. மகாலிங்கம் அவர்கள் தி என்று வாசிக்கிறார். இது ழு என்பது தெளிவு. சாசன எழுத்து இலாகாவும் மகாதேவனும் இதை ழு என்றே சரியாக வாசித்திருக்கிறார்கள். முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்து எழு என்றாகிறது.

இனி அடுத்த 3வது 4வது எழுத்துகளைப் பார்ப்போம். இவை த்து என்பவை. சாசன எழுத்து இலாகா த்து என்றே வாசித்திருக்கிறது. மகாலிங்கம் த்த என்று வாசிக்கிறார். ஐ. மகாதேவன் தாந என்று வாசிக்கிறார். இப்படி வாசிப்பதற்கு காரணமும் இல்லை. இவ்வெழுத்துக்கள் த்து என்பதே.