பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நன்னனுக்கும் நடந்த போரில் நன்னன் தோற்றான்; துளுநாடு, சேரன் ஆட்சிக்குக் கீழடங்கிற்று.

புன்னாட்டு அரசனும் கொங்குநாட்டுச் சேரருக்குக் கீழடங்கினான். புன்னாட்டின் தலை நகரமான கட்டூரின் மேல், பெரும்பூண் சென்னி என்னும் சோழ அரசனுடைய சேனாபதி படையெடுத்துச் சென்றான். அந்தச் சேனாபதியின் பெயர் பழையன் என்பது. சோழநாட்டுக் காவிரிக்கரையில் இருந்த போர் என்னும் ஊரில் பழையன் பரம்பரையார் சோழரின் படைத் தலைவராகப் பரம்பரை பரம்பரையாக இருந்தனர் (அகம். 326: 9-12.) பழையன் கட்டூரின்மேல் படையெடுத்து வந்தபோது, கொங்குச் சேரனுக்குக் கிழடங்கியிருந்த நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் சிற்றரசர்கள் பழையனுடன் போர் செய்து அவனைப் போர்க்களத்தில் கொன்றுவிட்டனர். இவ்வாறு சோழனுடைய கட்டுப் படையெடுப்பு தோல்வியாக முடிந்தது. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென.” (அகம். 44: 7-11) இதற்குப் பிறகு புன்னாட்டின் வரலாறு தெரியவில்லை.

கி. பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் புன்னாட்டு அரசர் பரம்பரை புன்னாட்டையரசாண்டு வந்தனர். ஸ்கந்தவர்மன் என்னும் புன்னாட்டு அரசனுக்கு ஆண்மகன் இல்லாதபடியால் அவனுடைய ஒரே மகளைக் கங்க அரசனான அவனிதனுடைய மகனான துர்வினிதன் மணம் செய்து கொண்டான். துர்வினிதன் கி.பி. 482 முதல் 517 வரையில் கங்க நாட்டை யரசாண்டான். புன்னாட்டு அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்ட இவன் புன்னாட்டைத் தன்னுடைய கங்க இராச்சியத்தோடு இணைத்துச் சேர்த்துக் கொண்டான்.