பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

நாட்டைத் தன்னுடைய இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். இந்தப் போரின் விபரத்தைச் சங்கப் புலவர்களின் செய்யுள்களிலிருந்து அறிகிறோம்.

பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின் கொல்லி நாட்டின் மேல் நேரே படையெடுத்துச் செல்லவில்லை. அவன், மலைய மான் திருமுடிக் காரியைக் கொண்டு ஓரியை வென்று கொல்லி நாட்டைத் தன் இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். கோவலூர் மன்னர்களான மலையமான் அரச பரம்பரையினர் சேர சோழ பாண்டிர்களில் யாரேனும் விரும்பினால், அவர்களுக்குச் சேனாதிபதியாக இருந்து போர் செய்வது வழக்கம். மலையமான் திருமுடிக்காரி, பெருஞ்சேரல் இரும்பொறைக்காக ஓரியுடன் போர் செய்து அவனைப் போரில் கொன்று கொல்லி நாட்டைப் (கொல்லிக் கூற்றத்தை) பெருஞ் சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான். கபிலர் பரணர் முதலான புலவர்கள் இச் செய்தியைக் கூறுகின்றனர்.

ஓரியின் குதிரைக்கு ஓரி என்றும், காரியின் (மலையமான் திருமுடிக்காரியின் குதிரைக்குக் காரி என்றும் பெயர். இவ்விருவரும் தத்தம் குதிரைமேல் அமர்ந்து போர் செய்தனர் என்று இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார்.[1] இந்தப் போரில் ஓரி இறந்து போனான். வெற்றிபெற்ற காரி, ஓரியின் ஊரில் புகுந்தான்.[2] கல்லாடனார் இதை இன்னும் தெளிவாக விளக்கிக் கூறுகிறார். முள்ளூர் மன்னனாகிய காரி


  1. காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும்.” (சிறுபாண், 110-111)
  2. “பழவிறல், ஓரிக்கொன்ற ஒரு பெருந் தெருவில், காரி
    புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால் ஊரே.”
    (நற். 330 : 4-7)