பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101

வனையும் கைது செய்துவந்த போலீஸார் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் தங்கமணி முதலியவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லையென்பதைக் கேட்ட உடனேயே வள்ளிநாயகி மூர்ச்சையடைந்தாள். அவளுக்கு மயக்கம் தெளிவித்து ஆறுதல் கூறுவது, இன்ஸ்பெக்டருக்கு மிகுந்த சிரமமாகிவிட்டது. டாக்டர் ஒருவரை வரவழைத்து அவளுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்தனர். இரவெல்லாம் தூக்கமில்லாமையாலும், அதுவரை உணவருந்தாமையாலும், குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்ற கவலையாலும் வள்ளிவிநாயகி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அவளுக்குப் பல வகைகளில் ஆறுதல் கூறியதோடு அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

"இங்கிருந்து சுமார் 8 மைல் தூரத்திலே வஞ்சியாற்றங் கரையில் உள்ள காட்டிலே தச்சுச்சுப்பட்டறையொன்று இருக்கிறதாம். அங்கேதான் குள்ளன் மரப்பொம்மைகள், செய்கிறானாம். அந்த இடத்திற்கு அவன் இன்று வந்து சேருவான் என்று தாழிவயிறனிடமிருந்து நமது ஜவான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே நாம் போகவேண்டியது மிக முக்கியம். இந்தச் சமயத்திலே நீங்கள் தைரியத்தைக் கைவிடக்கூடாது" என்று கூறினார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

"தங்கமணி, சுந்தரம், கண்ணகி இவர்கள் எறி வந்த பரிசல் என்ன ஆயிற்றோ தெரியவில்லை!" என்று கூறிக் கொண்டே அவள் கண்ணீர் வடித்தாள்.

"தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் பரிசல் தள்ளத் தாழிவயிறன் கற்றுக்கொடுத்தானாம். அதனால் அவர்கள் எப்படியாவது சமாளித்துக்கொண்டு எங்காவது ஓரிடத்தில் கரை சேர்ந்திருப்பார்கள். நீங்கள் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் கரையோரமாகவே செல்ல வேண்டியிருப்பதால் அவர்களையும் கண்டு பிடித்துவிட முடியும்" என்று இன்ஸ்பெக்டர் நம்பிக்கையோடு தெரிவித்தார். இது வள்ளி நாயகிக்கு உற்சாகத்தை அளித்தது. உடனே அவள் எழுந்து புறப்படத் தயாரானாள். வள்ளிநாயகியை உடன் அழைத்துச் செல்லப் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரும்பவில்லையென்றாலும் தானுங் கூட வருவதாக அவள் பிடிவாதம் செய்தாள்.