பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102

"அப்படியானால் முதலில் சாப்பிடுங்கள். பாதித் தூரத்திற்குப் பிறகு நடக்கவேண்டியிருக்கும்" என்றார் இன்ஸ்பெக்டர். எல்லாரும் அதுவரை உணவருந்தவில்லையென்பதை அவள் உணர்ந்தாள். அவள் மூர்ச்சையுற்றதால் அவளுக்குச் சிகிக்சை செய்வதையே அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.

உணவு வரவழைத்து உண்டபின் எல்லாருக்கும் தெம்பு உண்டாயிற்று. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவராதலால் வேண்டிய ஏற்பாடுகளை எளிதில் செய்தார். மேலும் ஒரு பதினைந்து போலீஸ்காரர்களைத் தம்முடன் வர ஏற்பாடு செய்தார். துப்பாக்கியும் கையுமாக அனைவரும் புறப்பட்டார்கள்.

இவ்வாறு பல இடையூறுகளுக்குப் பின் அவர்கள் புறப்பட்டாலும் அவர்கள் தக்க சமயத்திலே உதவி செய்ய முடிந்தது. முதலில் அவர்கள் தச்சுப்பட்டறையை அடைந்தார்கள். அங்கே தச்சர்கள் சிலர்தான் இருந்தனர். அவர்கள் போலீஸ்காரரைக் கண்டதும் பயந்தனர். "குள்ளன் எங்கேயிருக்கிறான்?" என்று இன்ஸ்பெக்டர் அவர்களை அதட்டிக் கேட்டார். பயத்தால் தச்சர்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மேலும், கொல்லி மலைக் குள்ளன் என்ற பெயரையே அவர்கள் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பதிலேதும் அளிக்காமல் 'திருதிரு' என்று விழித்துக்கொண்டு நின்றார்கள். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மேலும் அதட்டினார்.

கடைசியில், அவர்களுடைய எஜமானன் பதினைந்து ஆள்களோடு ஏரிக்கரையை நோக்கிப் போனதாகத் தெரியவந்தது. அந்தத் தச்சர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டு, அவர்களைப் பார்த்துக்கொள்ள ஒரு போலீஸ்காரரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டர் வேகமாகப் புறப்பட்டார். மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். ஏரிக்கரையை அனைவரும் அடைந்தனர்.

அவர்கள் ஏரிக்கரையை அடையவும், கொல்லிமலைக் குள்ளனின் ஆள்கள் பேராசிரியர் வடிவேல் முதலியவர்களின் மேல் பாயவும் சரியாக இருந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், "அவர்களைத் தொடாதே! தொட்டால் சுட்டுவிடுவேன்” என்று உரத்த குரலில் கர்ஜித்தார். அதே சமயத்தில் தம்முடைய கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார்.