பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வடிவேலிடம் வீர்சிங் ஆங்கிலத்திலே பேசினார். சென்னையிலே பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலத்திற்கு வந்திருப்பதாகவும், அங்கு வந்த பிறகுதான் வஞ்சியூரில் நடக்கும் திருவிழாவிலே ஒயிலாட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும் என்று கேள்விப்பட்டதாகவும், அதைப் பார்ப்பதற்காக அவர் தம் குழுவைச் சேர்ந்த சிலரோடு முதல் நாள் இரவு அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

"ஒயிலாட்டம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில நாள்கள் இங்கே தங்கி அந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறோம். முடியுமானால், இந்த ஒயிலாட்டக் கோஷ்டியை எங்கள் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லலாமென்று இருக்கிறேன்" என்று அவர் ஆங்கிலத்திலே தாம் அங்கு வந்துள்ள காரணத்தைத் தெரிவித்தார்.

"நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? இங்கே வசதியாக உங்களுக்குத் தங்க இடம் கிடைத்ததா? புதிய இடமாயிற்றே!" என்று வடிவேலும் ஆங்கிலத்திலேயே கேட்டார்.

சேலத்திலே உத்தியோகஸ்தர் ஒருவர் எங்களுக்குக் கடிதம் கொடுத்தார். அதனால் ஆற்றோரத்திலே தனியாக ஒரு தோட்டத்து வீட்டில் எங்களுக்குத் தங்க இடம் கிடைத்தது. குழந்தைகளெல்லாம் ஆற்றில் நீந்தவும், படகு சவாரி செய்யவும் ஆவலோடு இருக்கிறார்கள். நான் படகெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி தந்தால் ஒரு மணி நேரத்தில் இவர்களைத் திருப்பி அழைத்து வந்துவிடுகிறேன்” என்றார் வீர்சிங்.

"ஆமாம், மாமா, இந்த வீர்சிங் ரொம்ப நன்றாக நீந்துவார். நாங்கள் போகட்டுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

"எனக்கு நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடத்திலே அதற்கு வேண்டிய ரப்பர் வளையம் இருக்கிறதாம். நானும் போகிறேன், அப்பா என்று கெஞ்சினாள் கண்ணகி.

"ஒன்றும் கவலை வேண்டாம். நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன்" என்று வீர்சிங் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

குழந்தைகளின் ஆவலைக் குலைக்க வடிவேல் விரும்ப வில்லை. அதனால் அவர் இசைந்தார். எல்லாரும் உற்சாகத்