பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கூழாங்கற்கள் நிறையக் கிடந்தன. கூழாங்கற்களிலே பாசம் படிந்து அதிக வழுக்கலாக இருந்தது. வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு நடந்த கண்ணகி வழுக்கலைக் சமாளிக்க முடியாமல் ஓரிடத்திலே விழுந்துவிட்டாள். விழாமல் தப்பித்துக்கொள்ள அவள் வேகமாக வீர்சிங்கின் இடக்கையை மூடியிருந்த ஜிப்பாவைப் பற்றினாள். அதனால் ஜிப்பாவின் இடக்கை அப்படியே கிழிந்து வந்துவிட்டது. வீர்சிங்கின் இடக்கையில் 'குள்ளன்' என்று பெரியதாகப் - பச்சை குத்தியிருந்தது. அதைப் பார்த்த சுந்தரம், 'குள்ளனா!' என்று தன்னையும் மறந்து கத்திவிட்டான். தங்கமணி உடனே நிலையைச் சமாளிக்க விரும்பி,

"குள்ளக் குள்ளனைக்
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
வினாயக னைத்தொழு"

என்று தான் குழந்தைப் பருவத்தில் கேட்டுப் பாடம் செய்திருந்த பாட்டைப் பாடினான். "யாருக்காவது தீங்கு நேரிட்டால் இந்த பாட்டைச் சொல்லுவது எங்களுக்கு வழக்கம். சுந்தரமும் அதைத்தான் சொல்லத் தொடங்கி, அதற்குள் கண்ணகி எழுந்துவிட்டதால் நிறுத்திவிட்டான்" என்று அவன் வீர்சிங்கிடம் விளக்கம் கூறினான்.

இருந்தாலும், அந்தக் குள்ளன் தன்னை யாரென்று இந்தச் சிறுவர்கள் அறிந்துகொண்டதை உணர்ந்துகொள்ளாமலிருக்கவில்லை. ஆனால், அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “பரிசலிலே ஏறி ஆற்றிலே கொஞ்ச தூரம் சென்று வரலாமா, பரிசலில் போவது நன்றாக இருக்கும்" என்றான். அவன் கூறிய யோசனைக்கு இணங்காவிட்டால் சந்தேகம் உண்டாகுமென்று கருதி, தங்கமணி உடனே சம்மதம் தெரிவித்தான். குள்ளன் கொஞ்ச தூரத்துக்கப்பால் பரிசலோடு நின்றுகொண்டிருந்த ஒருவனைப் பார்த்துப் பேசப் போனான்.

"உடனே சத்திரத்திற்குப் போய் மாமாவிற்கு உண்மையைச் சொல்ல வேண்டாமா?" என்று ஆவலோடு கேட்டான் சுந்தரம். “இப்பொழுது போக முயன்றால், அவன் சந்தேகப்படுவான்; நம்மைப் போகவும் விடமாட்டான்; நமக்கு