பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

 மூவரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தயங்கித் தயங்கி இறங்கினர். தாழிவயிறன் பரிசலை ஓர் இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டுப் பின்தொடர்ந்தான். ஜின்காவிற்கு அவன்மேல் எப்படியோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவனை அது முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டே நடந்தது. நிழலான ஒரு பகுதியை அடைந்ததும் தாழிவயிறன் அங்கே படுத்துவிட்டான். மற்ற மூவரும் அந்தக் காட்டைப் பார்க்கப் போவது போல் பாசாங்கு செய்து கொண்டு சற்று எட்டி நடந்து போனார்கள்.

“நல்ல தாழியடா அவன் வயிறு. எத்தனை பெரிசு" என்று கவலைக்கிடமான நிலைமையிலும் சுந்தரம் கேலியாகப் பேசினான்.

"நாம் சந்தேகப்படுவதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது. இந்தக் காட்டைப் பார்த்ததும் இங்கிருந்து புறப்படலாமென்று அவனிடம் சொல்லலாம்” என்று தங்கமணி கூறிானன்.

"அண்ணா. அவன் தான் கொல்லிமலைக் குள்ளனா ? எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கண்ணகி குழறிக் குழறிப் பேசினாள்.

"நாம் கண்டுகொண்டதாக அவன் தெரிந்துகொண்டானா என்று தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.