22
“மறுத்திருந்தால் மட்டும் தப்ப முடியுமா? நாம் குளித்துக் கொண்டிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இருக்கவில்லை. குள்ளனும் தாழிவயிறனுந்தான் இருந்தார்கள். அவர்கள் சுலபமாக நம்மைச் சத்திரத்திற்குப் போகவொட்டாமல் தடுத்திருக்க முடியும்.”
"இதையெல்லாம் நீ அப்பொழுதே நினைத்துப் பார்த்தாயா?"
"ஆமாம்; அது மட்டுமல்ல. குள்ளன் நம்மை அடித்து ஆற்றில் போடவும் தயங்கியிருக்கமாட்டான். இப்பொழுது நம்மீது அவனுக்குக் கொஞ்சம் சந்தேகம் மட்டும் இருக்கிறது. அதனால் சத்திரத்திற்குப் போக முடியாமல் செய்து வைத்திருக்கிறான். நிச்சயமாக நமக்கு அவன் கொல்லிமலைக் குள்ளன் என்று தெரிந்துவிட்டதாக இருந்தால் அவன் எதற்கும் துணிவான்!"
"டேய், நீதான் உண்மையான துப்பறியும் சாம்பு."
"அதிருக்கட்டும். இப்பொழுது தப்பிக்க வழி பார்ப்போம். இந்தத் தாழிவயிறனை எப்படியாவது ஏமாற்ற வேண்டும்" என்றான் தங்கமணி.
இந்தச் சமயத்திலே தாழிவயிறன் உரக்கக் கூவினான். “டேய் பசங்களா, வாங்கோ. சோறு வந்திருக்குது.”
"ஓகோ, அப்படியா! சரி, நம்மை இங்கேயே அடைத்து வைத்திருக்கக் குள்ளன் திட்டம் போட்டிருக்கிறான். அதுவும் ஒரு வகையில் நல்லதே" என்று தங்கமணி கூறிக்கொண்டே நடந்தான்.
“அண்ணா , இங்கேயே இருந்தால் இருட்டிலே பயமாய் இருக்குமே" என்று கண்ணகி தேம்பத் தொடங்கினாள்.
“இங்கே நம்மை வைத்திருக்க முயன்றால் மாமா தேடி வர மாட்டாரா?" என்று சுந்தரம் கொஞ்சம் நம்பிக்கையோடு சொன்னான்.
"குள்ளன் நம்மை இரவோடு இரவாக எங்காவது கடத்திச் செல்ல முயலுவான் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்துவிட்டு எங்காவது தப்பியோட நினைப்பான்," என்று தங்கமணி கருதினான். குள்ளன் என்ன செய்வானென்று அவனுக்கு நிச்சயமாகப் புலப்படவில்லை. எதற்கும் இரவில் தப்பிப்போக வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிக்