பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

 பேராசிரியர் குள்ளனோடு புறப்பட்டார். கார் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கள் நடமாட்டமில்லாத ஓர் இடத்திலே குள்ளனும் அவனுடன் காரிலே வந்திருந்த இரண்டு ஆள்களுமாகச் சேர்ந்து வடிவேலை ஒரு கயிற்றைக்கொண்டு கட்டிவிட்டார்கள். மூன்று பேர் திடீரென்று அவர் மீது பாய்ந்து பிடித்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் சத்தம் போடாதபடி ஒருவன் அவர் வாயில் துணியால் கெட்டியாக மூடிப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு சற்றும் எதிர்பாராத விதமாக வடிவேல் குள்ளனிடம் அகப்பட்டுவிட்டார்.

குள்ளன் இதோடு நிற்கவில்லை. வள்ளிநாயகிக்குக் கவலை உண்டாகாதவாறு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். வடிவேலைப் பத்திரமாக ஓர் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்படி தன் ஆள்களிடம் ஏற்பாடு செய்துவிட்டுச் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சத்திரத்திற்குத் திரும்பி வந்தான். வள்ளிநாயகி ஆவலோடு சுந்தரத்தைப்பற்றி விசாரித்தாள்.