பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கொல்லிமலைக் குள்ளன் அவ்விடத்திலிருந்து வேகமாகப் புறப்பட்டான்.

தங்கமணி முதலியவர்களை வஞ்சியாற்றின் மறு கரையிலுள்ள காட்டிலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்பது அவனுடைய அடுத்த திட்டம். அவர்களையும் வேறு இடத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டால் அவனுடைய காரியம் வெற்றியோடு முடிந்துவிடும். அந்த இடத்திலிருந்து நடராஜ சிலையோடு அடுத்த நாளே பம்பாய்க்குப் போய், அங்கிருந்து எகிப்து, ரோம் வழியாக அமெரிக்கா செல்ல அவன் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தான். அதற்கு வேண்டிய விமானப் பிரயாணச் சீட்டுகளும் வாங்கியிருந்தான். அப்படி அவன் சென்றுவிட்டால் அவனை யாருமே பிடிக்க முடியாது. யார் அந்த நடராஜ சிலையைக் களவு செய்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. இதுதான் அவனுடைய திட்டம்.

தனது ஜாகைக்குச் சென்றதும் இரண்டு ஆள்களை ஒரு பரிசலில் சென்று தாழிவயிறனையும் தங்கமணி முதலியவர்களையும் அழைத்து வரும்படி சொன்னான். அவர்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர். ஆனால், கொல்லிமலைக் குள்ளன் எதிர்பார்த்தபடி அவர்கள் மற்றவர்களோடு விரைவில் திரும்பவில்லை. "ஏன் இவ்வளவு நேரமாகிறது? அக்கரைக் காட்டிற்குப் போய்விட்டுவர முக்கால் மணிக்கு மேல் பிடிக்காதே?" என்று அவன் கொஞ்சம் பதட்டத்தோடு எண்ணிக்கொண்டு தன் ஜாகையின் முன்னால் உலாவிக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் ஆள்கள் தாழிவயிறனோடு திரும்பி வந்தார்கள். தங்கமணி முதலியவர்களைக் காட்டில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும், பரிசலைக் காணாததால் அவர்கள் தாழிவயிறன் தூங்கிக்கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பரிசலில் ஏறிக்கொண்டு ஆற்றின் வழியாகவே போயிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். தாழிவயிறன் மேல் கொல்லிமலைக் குள்ளனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனை வாய்க்கு வந்தவாறெல்லாம் திட்டினான். தாழிவயிறனையும் மற்ற இருவரையும் உடனே ஒரு பரிசலில்