பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

 சொக்கப்பனும் திகைத்துப் போய் மௌனமாக இருந்தார்கள். அவர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை.

"டேய் 712, அவன் தொப்பை வயித்திலே ரெண்டு கும்கா குத்து விடு. அப்பத்தான் உண்மை வெளிவரும்." இப்படி ஒரு போலீஸ்காரன் சொன்னதுதான் தாமதம், "கும்கும்" என்று தாழிவயிறனுடைய வயிற்றின் மேலே குத்து விழலாயிற்று.

“ஐயோ சாமி, எல்லாம் சொல்லிவிடுகிறேன். குத்தாதீங்க. தின்ன தேங்காயெல்லாம் வெளியே வந்திடும் போல இருக்குது” என்று கெஞ்சினான் தாழிவயிறன்.

"ம், ம், சொல்லு, சட்டென்று சொல்லு" என்று இன்னும் இரண்டு குத்துவிட்டான் போலீஸ் வீரன். தாழிவயிறன் உண்மையைச் சொல்லிவிட்டான். தங்கமணி முதலியவர்களைத் தேடிப்பிடிக்க அவர்களை அனுப்பியிருக்கிறார்கள் என்ற உண்மை போலீஸ் வீரர்களுக்குத் தெரிந்துவிட்டது.

"யார் உங்களை இப்படித் தேடிப்பிடிக்கச் சொன்னது? அந்தக் கொல்லிமலைக் குள்ளனா?” என்று பலத்த குரலில் கேட்டான் ஒரு போலீஸ்காரன்.