பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

"ஒருவேளை நம்மைக் காப்பாற்றுவதற்கு மாமா அனுப்பிய பரிசலாக இருந்துவிட்டால்...........?"

"அப்படி நினைத்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. நமக்கு இப்பொழுது துணை எதிர்பார்ப்பதைவிட, ஆபத்தை வலியத் தேடிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நமக்குத் துணையாக வந்த பரிசல்களாக இருந்தாலும் விடிந்த பிறகு அவற்றைப் பற்றி யோசிப்போம். முதலில் ஜின்கா வந்து சேரட்டும். அதுவரையில் நாம் புதிய தொல்லையில் மாட்டிக்கொள்ளக் கூடாது.”

இவ்விதம் தங்கமணி தீர்மானமாகக் கூறிவிட்டான். அதனால் போலீஸ்காரர்களின் உதவியை அவர்கள் பெற முடியாமல் போய்விட்டது. தங்கமணியின் எண்ணமெல்லாம் இப்பொழுது ஜின்காவைப் பற்றியே இருந்தது. அது திரும்பி வருவதை அவன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சத்திரத்தை விட்டுப் புறப்பட்ட ஜின்கா வெகு வேசமாக வந்துகொண்டிருந்தது. முதலில் வஞ்சியாற்றின் கரையோரமாகவே தரையில் தாவித்தாவிப் பாய்ந்து ஓடிற்று. கரையோரத்திலேயே மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி வந்ததும் கரையிலிருந்து ஆற்றில் குதித்து நீந்தலாயிற்று. இவ்வாறாக அது நிலத்திலும் நீரிலும் மாறிமாறிச் சென்றது. எப்படியாவது தங்கமணியிடம் விரைந்து செல்ல வேண்டுமென்று அதற்கு ஒரே ஆவல். ஆனால், நீண்ட நேரம் அது வேகமாக வந்தும் பரிசல் அதன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.


11

“தங்கமணி, இந்த மரம் ஒரே ஆட்டம் கொடுக்கிறதே, அதிக நேரம் தாங்காது போல் இருக்கிறது" என்று சுந்தரம் தெரிவித்தான். ஆற்றுவெள்ளத்திற்குள் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளையைச் சுற்றிப் போடப்பட்ட கயிற்றில் இரண்டு நுனிகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கும் முறை இப்பொழுது அவனுக்கு. அதனால் மரத்தின் நிலைமையை அவனால் உணர முடிந்தது.