பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

எதிர்பார்த்தான். சுந்தரமும் அவனுடைய யுக்தியைப் புரிந்து கொண்டு உற்சாகமாகப் 'பலே, பலே' என்று கூவினான்.

கயிற்றின் ஒரு நுனி அடி மரத்திலே கெட்டியாகச் சுற்றி யிருந்தது. மற்றொரு நுனியைத் தங்கமணி உறுதியாகப் பிடித்துக்கொண்டான். "அண்ணா, நானும் பிடிக்கட்டுமா? ...............சுந்தரம், நீ துடுப்புப் போடுவதை விடாதே” என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூறினாள்.

"துடுப்புப் போடாவிட்டாலும் இனிப் பரிசல் கரையோரம் சேர்ந்துவிடும்” என்று கூறினான் சுந்தரம்.

சுந்தரம் கூறியது மெய்தான். இப்பொழுது பரிசல் ஆற்று வேகத்தினாலேயே தள்ளப்பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையை அணுகிற்று. ஆழம் முழங்கால் அளவுக்கு மேல் அதிகம் இல்லை என்று தெரிந்ததும் தங்கமணி ஆற்றில் குதித்தான். பரிசலின் விளிம்பைக் கையில் பிடித்து அதைக் கரைக்கு இழுத்துச் சென்றான். சுந்தரமும் அவனைப் பின்பற்றி நீரில் குதித்து அவனுக்கு உதவியாக இழுத்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் கரையை அடைந்துவிட்டனர். கண்ணகி குதூகலத்தோடு கீழே இறங்கினாள். பிறகு தங்கமணியும் சுந்தரமும் சேர்ந்து பரிசலைத் தண்ணீரை விட்டே மேலிழுத்துவிட்டார்கள். அதற்குள் ஜின்கா கயிற்றை இழுத்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தது. பொழுதும் விடியலாயிற்று.

எல்லோருக்கும் ஒரே உற்சாகம். "டேய், அந்தக் கடிதத்தைப் பாரடா" என்று சுந்தரம் உற்சாகமாகக் கூறினான்.

தங்கமணி அவசரம் அவசரமாகக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான். தந்தை வடிவேலை அந்தக் குள்ளன் சூழ்ச்சி செய்து எங்கேயோ கொண்டுபோய் விட்ட செய்தியும், உதவிக்காகப் போலீஸ்காரர்களை ஒரு பரிசலில் அனுப்பிவிட்டு வள்ளிநாயகி கூடல் பட்டணம் செல்லுகின்ற செய்தியும் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தன.

"அந்தப் பரிசலைப் பார்த்தோமே,உடனே நாம் கூவி அழைத்திருக்க வேண்டும்" என்றான் சுந்தரம்.

“ஒரு பரிசல் தானே அம்மா அனுப்பியிருக்கிறார்கள்! இரண்டு பரிசல்கள் எப்படி ஜோடியாக வந்தன?" என்று ஐயத்தோடு தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் தங்கமணி.