64
குள்ளன் இவ்வாறு பொம்மைக்குள் மறைத்து எடுத்து வந்த சிலையை இருபதாயிரம், முப்பதாயிரம் டாலர் என்று விலைக்கு விற்றுப் பொருள் திரட்டி வந்தான். இதுவரை யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருதாசலம் கூறியவற்றிலிருந்து குள்ளனுடைய சூழ்ச்சி தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் ஓரளவு விளங்கிற்று. அவர்கள் இரண்டு பேரும் மருதாசலத்தோடும் அவன் தந்தையோடும் பேசி, இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்டிருந்தார்கள்.
இப்படி இவர்கள் குகைக்குள்ளே பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கண்ணகி கொஞ்சநேரம் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளுக்குச் சலிப்பேற்பட்டுவிட்டது. ஜின்காவுக்கும் குகைக்குள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை. அது மெதுவாக வெளியே நடக்கத் தொடங்கியது.
கண்ணகியும் அதைப் பின்பற்றி வெளியே வந்தாள். அவளும் ஜின்காவும் வெளியே சென்றதைத் தங்கமணியும், சுந்தரமும் கவனிக்கவில்லை . மருதாசலமும், அவன் தந்தையும் கூறியவற்றைக் கேட்பதிலேயே அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். உச்சி வேளை சுமார் 12 மணிக்கு உணவு தயாராகிவிட்டது. சாப்பிடப் போகும் போதுதான் கண்ணகியைப்பற்றிய நினைவு வந்தது. ‘கண்ணகி!’ என்று கூப்பிட்டான் தங்கமணி. சுந்தரம் வெளியே சென்று பார்த்தான்.
“எங்கேடா உன் குரங்கையும் காணோம்?” என்று சுந்தரம் கூறிக்கொண்டு ‘கண்ணகி!’ என்று உரத்துக் கூவினான். ஆனால், கண்ணகி வரவில்லை. ஜின்காவும் குரல் கேட்டு ஓடி வரவில்லை. பக்கத்திலே அங்குமிங்குமாக அனைவரும் ஓடிப் பார்த்தார்கள். “கண்ணகி! ஜின்கா!” என்று தங்கமணி பலத்த குரலெடுத்துக் கூவினான். ஆனால், கண்ணகியையும் காணோம்; ஜின்காவையும் காணோம்!
தங்கமணியின் முகத்திலும், சுந்தரத்தின் முகத்திலும் கவலை படிந்திருந்தது. மருதாசலமும் தில்லைநாயகமும்