பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

"மாமா வந்தவுடன் கேட்டுப் பார்க்கலாம்." சுந்தரம் இப்பொழுது தனது கேலியை மறந்துவிட்டான்.

"அப்பாவுக்கு எப்பவும் வேலை தான். வேலையை விட்டால் நாவல் படிப்பு" என்றான் தங்கமணி.

"அதிலும் துப்பறியும் கதை என்றால் மாமாவுக்குச் சோறுகூட வேண்டாம்." சுந்தரம் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது. "அதோ, அப்பா வருகிறார்" என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூவினாள்.

வடிவேல் ஆழ்ந்து எதையோ சிந்தித்துக்கொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தார். திண்ணையிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவரையும் அவர் கவனிக்கவே இல்லை. அவர் முகத்தில் சிரிப்பே காணப்படாததைக் கண்டு, கண்ணகிக்கும் மற்ற இரண்டு சிறுவர்களுக்கும் அவரிடம் தங்கள் விருப்பத்தை உடனே தெரிவிக்கத் துணிச்சல் ஏற்படவில்லை.

வடிவேல் வழக்கம் போல இவர்கள் மூவரையும் உற்சாகமாகக் கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழையவில்லை. ஏதோ ஆழ்ந்த எண்ணத்தில் மூழ்கியவராக அவர் காணப்பட்டார். அதனால் இவர்கள் மூவரும் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே நுழையாமல் திண்ணையிலேயே தங்கி விட்டார்கள்.

அந்தச் சமயத்தில் சுந்தரத்திற்குத் திடீரென்று ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. “டேய் தங்கமணி, அந்த பஞ்சாப் காரர் நம்மிடம் சொன்னதை மறந்துவிட்டாயா? நம்மையெல்லாம் இன்றைக்குப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னாரே!" என்று சுந்தரம் நினைவு கூட்டினான்.

"போடா, அவர் எங்கே வரப்போகிறார்? முதலில் அவர் வந்து அப்பாவிடம் அனுமதி வாங்க வேண்டுமல்லவா?” என்று தங்கமணி சந்தேகத்தோடு சொன்னான்.

"எனக்கென்னவோ அவர் வருவார் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த வீட்டு முகவரியை எதற்குக் கேட்கிறார்?"

"அவர் பேசியதைப் பார்த்தால் நமது வீட்டு முகவரி முன்னமேயே தெரிந்தவர் போல எனக்குப் பட்டது."