பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

“எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் எங்கள் அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். அவரைக் கட்டி எடுத்துக்கொண்டு குள்ளன் தச்சுப் பட்டறைக்குப் போக ஆள்களோடு வந்திருக்கிறான். போகும் வழியிலே ஏதோ ஒன்றை மனத்தில் கொண்டு அவன் அந்த ரகசியக் குகைக்குச் செல்லத் தனியாக மேலே வந்திருக்கிறான், அவன் எதற்காக வந்தானென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் ரகசியக் குகையில் அவனுக்கு ஏதோ வேலை இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அவன் யாரையும் துணைக்கு அழைக்காமல் வந்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் அந்த ஆள்களிடம் சொல்லி வந்திருக்க வேண்டும். அவன் இவ்வளவு நேரமாகியும் திரும்பாததனால் தான் அவர்கள் சீழ்க்கையடிக்கிறார்கள்” பன்று தங்கமணி தன் கருத்தை எல்லாருக்கும் தெரியுமாறு வெளியிட்டான்.

“ஆமாம். அதற்காக அந்தத் தடியர்களை இங்கு எதற்காக வரும்படி சொல்ல வேண்டும்?” என்று சுந்தரம் கேட்டான்.

“நாம் வரச்சொல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, அவர்கள் மேலே வரத்தான் செய்வார்கள். அப்படி வந்தால் அவர்கள் சந்தேகத்தோடுதான் வருவார்கள். அப்படி அவர்கள் சந்தேகப்படுவது நமக்கு நல்லதல்ல” என்று தங்கமணி ஆழ்ந்த சிந்தனையோடு பதில் சொன்னான். ஆனால், அவனுடைய கருத்து ஒருவருக்கும் புரியவில்லை.

“நூலேணியை மேலே இழுத்துவிடுகிறேன். அப்போது அவர்கள் வர முடியாது” என்று மருதாசலம் உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டே குகையை விட்டுப் புறப்பட்டான்.

“வேண்டாம், வேண்டாம். அவர்களை மேலே வரும்படி செய்வது தான் நல்லது” என்று மருதாசலத்தைத் தடுத்துவிட்டு, தங்கமணி தில்லைநாயகத்தின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னான். அதைக் கேட்டதும் தில்லைநாயகத்தின் முகம் மலர்ந்தது. அவர் தங்கமணியைத் தட்டிக் கொடுத்துவிட்டு, குகையின் வெளியே வந்து, பரிசலில் உள்ளவர்களை மேலே வருமாறு சீழ்க்கையடித்தார்.