பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


19

கொல்லிமலைக் குள்ளனைப்பற்றியும், அதுவரையில் நடந்த சம்பவங்களைப்பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பேராசிரியர் வடிவேலுவுக்கு ஒழிவு கிடைத்தது. அவற்றைத் தெரிந்துகொண்டதும் அவர் மேற்கொண்டு என்ன செய்வது என்பதைப்பற்றி எண்ணமிடலானார். முதலில் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திக்க வேண்டும். பரிசலில் தனியாக வந்த குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வள்ளிநாயகி மற்றொரு பரிசலில் மூன்று போலீசாரை அனுப்பினாள் அல்லவா ? அந்தப் பரிசலோடு மற்றொரு பரிசலும் சேர்ந்து ஆற்றில் சென்றதை இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள்; மற்றொரு பரிசலில் வந்தவர்கள் கொல்லி மலைக்குள்ளனின் ஆள்களாகத்தான் இருக்க வேண்டும். சாதாரணமாக அந்த ஆற்றிலே இரவு நேரங்களில் யாரும் பரிசலில் செல்லமாட்டார்கள் என்று தில்லைநாயகம் உறுதியாகக் கூறினார். அதனால், வந்தவர்கள் குள்ளனுடைய ஆள்களாகத்தான் இருக்கவேண்டும். போலீஸார் அந்த ஆள்களைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிப் பிடித்திருந்தால் இதற்குள் கூடல் பட்டணத்திற்குச் சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர்களை ஒப்படைத்திருப்பார்கள். அதே சமயத்தில் தங்கமணி முதலியவர்கள், வந்த பரிசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்திருப்பார்கள். அந்தச் செய்தி வள்ளி நாயகிக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணும். அதனால் வள்ளிநாயகியைப் போய்ச் சந்திப்பது முதலில் செய்ய வேண்டிய வேலையாகும். கூடல் பட்டணத்திற்குப் போனால் போலீஸ் இன்ஸ்பெக்டரோடு கலந்து யோசனை செய்துகொண்டு, கொல்லி மலைக் குள்ளனைப் பிடிப்பதற்கு வேண்டிய முயற்சியையும் செய்யலாம். அவன் தப்பிவிட்டானே ஒழிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதையும் மற்ற சிலைகளையும் எடுத்துச்செல்ல அவன் ரகசியமாக முயல்வான். அந்தச் சமயம் பார்த்து அவனைப் பிடித்துவிடலாம். அவனுடைய ரகசியக் குகையும் தெரிந்துவிட்டது. அதனால் அந்தப் பகுதியிலே மறைந்திருந்து அவனைப் பிடிக்க முயற்சி செய்ய