56
கோகோ ஆட்டம்
3. கம்பமும் கம்பக் கோடும் (Crossing The Line of The Post)
ஓடி விரட்டுபவரான ஒருவர், ஒரு கம்பத்திலிருந்து, இன்னொரு கம்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் உட்கார்ந்திருப்பவருக்கு கோ கொடுத்து உட்கார்ந்து கொள்ளலாம். அல்லது நேராக ஓடலாம்.
கம்பத்தை நோக்கி நேராக ஓடியவர், திரும்பி வந்த வழியே ஓடி வர வேண்டுமென்று விரும்பினால், ஓடி கம்பத்தைத் தொட்டுவிட்டால் போதும் என்று ஒரு சிலர் எண்ணிக்கொண்டு, அதன்படி ஆடுகின்றார்கள். கம்பத்தைத் தொட்டுவிட்டால் மட்டும் அவர் திரும்பி விட முடியாது.
கம்பத்தைத் தழுவியே போடப்பட்டுள்ள கம்பக் கோட்டினை முழுதும் கடந்தால் தான் திரும்பி வர முடியும். கோட்டை ஒரு காலால் மிதித்துவிட்டுத் திரும்புவதோ அல்லது எட்டத்தில் நின்று கொண்டே கம்பத்தைத் தொட்டுவிட்டு வருவதோ, இரண்டுமே தவறான ஆட்டமாகும்.
சடுகுடு ஆட்டத்தில் பாடித் தொடும் கோட்டை (Baulk line) எவ்வாறு கடந்துவிட்டு வரவேண்டுமோ, அதுபோலவே இந்தக் கம்பக் கோட்டையும் கடந்து விட்டே திரும்ப வேண்டும்.
ஒரு காலை கோட்டிற்கு அப்புறம் வைத்து, மறு காலை தூக்கி விட்டாலும் கடந்தது போல்தான். ஆட்ட அவசரத்திலும் இதனை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து நினைவு கூர்ந்து ஆட வேண்டியது மிகமிக அவசியமாகும்.