பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கோடுகளும் கோலங்களும்

கட்டிலில் பிள்ளைகளுடன் அண்ணன் இருக்கிறார். அண்ணி கருப்புத்தான். ஆனால் படித்த களை, பணக்களை.

“வாங்கண்ணா, அண்ணி நல்லாருக்கிறீங்களா?”

“ம். பொங்கச்சந்தையா?”

“ஆமா. நேத்துத்தா காகிதம் வந்திச்சின்னு சொன்னாங்க. நா காலம வரீங்களோ, ராத்திரியோன்னு நினைச்சே. பஸ்ஸுல வந்தீங்களா?”

“நாங்க மெட்ராசிலிருந்து வரோம். மாப்பிள்ளைகிட்டச் சொன்னனே? கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு? புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே? நல்ல வெள்ளாமைன்னு அப்பா சொன்னாங்க...”

“ஆமாம் காக்காணிக்கு ஒம்பது மூட்டை, ஒரு கருக்காய் பதர் இல்ல..” என்று ஆற வைத்துக் குந்தாணியில் குத்துப்பட்ட நெல்லை - அரிசியைக் கொண்டு வந்து காட்டுகிறாள்.

“இருக்கட்டும் நமக்கு இதெல்லாம் சரிவராது. மாப்புள்ள போல...”

"அண்ணி, நின்னிட்டே இருக்காங்க, நீங்க பாட்டுல உக்காருங்க..”

“அதான்பாய விரிச்சி வச்சேன்..” என்று கூறும் சுந்தரி காபி கொண்டு வருகிறாள். சாமி மேடைக்கு முன் ஒரு தாம்பாளத்தில், ஸ்வீட் பாக்கெட், கதம்பம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய வரிசைகள் இருக்கின்றன. நீலத்தில் கருப்புக் கரையிட்டு இரு சரிகைக் கோடுகள் ஒடிய சுங்கடிச் சேலை, ஒரு உயர் ரக வேட்டி, மேல் வேட்டி, எல்லாம் இருக்கின்றன. அண்ணியின் கழுத்தில், புதிய தங்கச் செயின் டாலருடன் பளபளக்கிறது. இரண்டு அன்னங்களாய்க் கல்லிழைத்த டாலர். உள்ளங்கழுத்தில் அட்டிகைப்போல் ஒரு